Post by anusham163 on Apr 14, 2013 21:34:44 GMT 5.5
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப
இந்த இரண்டு வரிகள் ஞானயோகப் பயிற்சியில் உள்ள மிகவும் முக்கியமான குண்டலினிப் பயிற்சியை நுட்பமாக விளக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளன.
விநாயக மூர்த்திக்கு அணிபணிகள் பல புனைந்து மகிழ்கின்ற தொண்டர் உலகம், இடுப்பிலே அரைஞாணைச் சுற்றி அமைத்தது ஒரு பெரிய யோக நுட்பமாகும்.
மனிதர்கள் தங்களுடைய குறிக்கோளை இறை வடிவத்திலே ஏற்றி வணங்குவது, வழிபாட்டு முறையின் வரலாற்றிலே பரந்து கானப்படுகிற ஓர் உண்மையாகும். இந்த வரலாற்றின் கண்கொண்டு அரைஞாணை நாம் நோக்கவேண்டும்.
விநாயகரை மூலாதார கணபதி என்று யோக நூல்கள் அனைத்தும் வழிபடுகின்றன. மூலாதாரம் என்பதே குண்டலினி ஆகிய கனலின் தோற்றுவாயாகும்.
நிலத்தின் அடியிலிருந்து தண்ணீர் சுரந்து மேலே வருவது போலே மனித உடம்புக்குள்ளிருந்து குண்டலினி என்ற ஆற்றல், மூலாதார நிலையத்திலிருந்து மேலே கிளம்புகிறது. ஞானயோக நூல்கள் அனைத்தும் இந்தக் குண்டலியின் தோற்றத் தேற்றத்தைப் பல்லாற்றானும் நமக்கு உணர்த்துகின்றன. மூலதாரத்திலிருந்து எழுகிற கனல், ஆன்ம ஆற்றல்கள் அனைத்திற்கும் வித்தாக அமைந்துள்ளது. குண்டலினி யோகம் என்பதே இந்த மூலாதாரக் கனலை மேல்நோக்கி எழுப்பித் தலையையும், அதன் மேல் உள்ள மண்டலத்தையும் எட்டும்படி செய்து, பிறகு இதை ஏற்றி இறக்கும் உத்திமுறைதான். இந்த ஏற்றி இறக்கும் உத்திக்குக் கருவிக் களனாக உதவுவது மனித உடம்பின் இடுப்பேயாகும்.
குண்டலினி என்னும் ஞானக்கனல் எழுந்து இயங்குவதை நெறிப்படுத்துகிற ஆற்றல் இடுப்பிலும், அதைச் சுற்றிலும் உள்ள தசை இயக்கத்திலும் அடங்கியுள்ளது. அரைஞாண் என்பது இடுப்பைச் சுற்றி இயங்குகிற மின்னாற்றலாகிய கொடி வளையமாகும் குண்டலினி ஆற்றல் மலே எழுவதற்கு, அதை இயக்கும் சக்தியாக இடுப்பின் ஆற்றல் வளையம் அமைகிறது என்பதையே இது குறிக்கிறது.
சிவபெருமானுடைய வடிவக் கோலங்களில், அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு பெரிய பாம்பு படமெடுத்து வளைந்து நிற்பதைக் காண்கிறோம். இடுப்பே குண்டலினிப் பாம்பு சுற்றியுள்ள இடம் என்பதை இவ்வாறு உருவகித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள்.
விநாயகருடைய வடிவிலே இடுப்பில் அரைஞாணை இறுக்கிக்கொண்டு இருப்பதாகக் காட்டுவதன் நோக்கம், குண்டலினி ஆற்றலினுடைய நிலையை மாற்றுவதற்கு இடுப்பிலே ஓர் ஆற்றல் வளைந்து சென்று இயக்கவேண்டும் என்பதை உணர்த்தவே.
குண்டலினி ஆற்றலின் நிலை மாற்றம் அடைந்தால்தான் ‘பிராணமய கோசம்’ என்று அழைக்கப்படுகிற ‘புரியட்டகம்’ என்னும் நுண்ணுடலின் நிலை மாண்பு பெறுகிறது. எனவே இந்த நிலை மாற்றத்தை அழுத்தமாக உணர்த்தவே ஞான வடிவமாகி விநாயகரின் இடுப்பிலே அரைஞாணை இறுக்கிக் கட்டினார்கள்.
இப்படி இறுக்கி இயங்குகிற ஆற்றலுக்கு ‘ஆகுஞ்சனம்’ என்று சித்தர்கள் இலக்கியம் பெயர் சூட்டியிருக்கிறது. மூலாதார மையத்தில் தசை இறுக்கம் என்ற உத்தியைக் கையாண்டு, இடுப்பைச் சுற்றித் தசை ஈர்ப்பை ஒரு குறிப்பிட்ட முறையிலே வளைத்து இயக்கினால், குண்டலினி என்ற மூலக்கனல் மேலே கிளம்பத் தொடங்கும். இந்த உத்திமுறையை மாணவன் ஞானகுருவின் முன்னிலையில் நேர்முகமாகப் பயிலவேண்டும். வெறும் ஏட்டுப்படிப்பை வைத்துக்கொண்டு இதைச் செய்ய முயலுவது ஆபத்துக்களுக்கு இடந்தரும்.
குருவினால் உணர்த்திக் காட்டக்கூடிய இந்த ‘ஆகுஞ்சனம்’ என்ற பயிற்சியே, அரைஞாண் என்ற குழூஉக்குறியால் உணர்த்தப்பெறுகிறது.. ‘இடுப்பை இயக்கு, குண்டலினி எழும்’ என்பது மூலக்கனற் பயிற்சியின் தொடக்கப் பாடமாகும். சுற்றி வளைத்துள்ள பாம்பு படம் எடுக்க வேண்டுமானால், இந்த வளைவாற்றலின் இயக்கம் அதற்குரிய உத்திமுறையிலே நடைபெற வேண்டும். இவ்வாறு நடைபெற்று ‘ஆகுஞ்சனம்’ என்ற பயிற்சி முறையினால் ‘புரியட்டகத்தின்’ ஆற்றல் மாறி இய்ங்கத் தொடங்கினால், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆன்ம நுண் நிலையங்களும் ஒரு குறிப்பிட்ட முறையிலே செயலாற்றத் தொடங்குகின்றன.
இவ்வாறு அரைஞாண் என்னும் உத்திமுறையானது இடுப்பை வைத்துக்கொண்டு இயங்குமேயானால், நமது உடம்பைச் சுற்றி பருவுடலைப் போர்த்து நிற்கும் மேலாடையாகிய ஒளி உடம்பு, ஒளிமிகுந்து கதிர் வீசத்தொடங்குகிறது.
ஞானப் பயிற்சியில் முன்னேற முன்னேற மாணவர்களின் முகத்திலே ஒளி திகழத் தொடங்குவதை நாம் காணமுடியும். சாதாரணமாக அறிவுநிரம்பிய பெரியோர்களுடைய முகத்திலே, ‘தேஜஸ்’ என்றும், ‘காந்தி’ என்றும், ‘அறிவுக்கனல்’ என்றும், ‘களை’ என்றும் பலபெயர்களில் நாம் அழைக்கின்ற ஓர் ஒளியானது கதிர்வீசுவதைக் காண்கிறோம் அல்லவா? நூலறிவும், கலையறிவுமே இத்தகைய ஒளியை முகத்திலே வீசக்கூடுமானால், பேரறிவின் ஆன்ம ஆற்றல் எழுந்து ஓங்குகின்ற ஒரு ஞானியின் நுண் உடலிலே ஒளியானது ஒப்பற்ற சுடர்ப்புடன் பொலிவது விந்தையாகுமா?
தங்க அரைஞாண் இந்த ஞான ஆற்றலின் இயக்கச் சுழலையும், பொன் என்பது அதனுடைய மின்னாற்றலையும், பூந்துகில் ஆடை என்பது பருவுடலைச் சுற்றி நிற்கும் நுண் உடலையும், அழகு எரித்தல் என்பது ஒளியின் கதிர்கள் எழுந்து வீசுவதையும் குறிக்கின்றன.
‘வண்ண மருங்கில் வளர்ந்து’ என்ற தொடர் இந்த உடம்பின் மருங்கில் ஒளியுடன் முழுப்பொலிவோடு திகழ்கிறது என்பதைக் குறிக்கிறது..
தொடரும்…………இந்த இரண்டு வரிகளின் விளக்கம் இன்னும் உள்ளது…….