Post by anusham163 on Apr 12, 2013 22:28:38 GMT 5.5
விநாயகர் அகவல்
நூல் விளக்கம்.
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட.
திருவடியைச் செந்தாமரை என்றழைப்பது ஓர் உயந்த தமிழ் மரபாகும்.
மலர் என்னும் தமிழ்ச் சொல்லுக்கே தாமரை என்பது சிறப்புப் பொருளாகும். ‘மலராவது தாமரையே’ என்பது பெரியோர் வாக்கு. எனவே இறைவனுடைய திருவடியைத் திருவடித் தாமரை என்றும், தாமரைத் திருவடி என்றும் தமிழர் வணங்கினார்கள். வடமொழியிலும் ‘பாத பங்கஜம்’, ‘பாத கமலம்’ என்பது மரபாகும்.
தாமரை சேற்றிலே மலர்வது. சேற்றில் மலர்ந்தாலும் செம்மலராகப் பூப்பது இம்மலரின் செம்மைசால் சிறப்பாகும். இதுவே வெண்தாமரையாகும்போது, தூய்மையின் சின்னமான வெண்மையாக மலர்கிறது.
அழுக்கிலிருந்து அழகும், அள்ளலிருந்து தூய்மையும் பிறக்கின்றன என்பது தத்துவம். கருத்து என்னவென்றால் எல்லா அழகும், அழகின்மையிலிருந்து உதித்து, மேலெழுந்து நிற்கிற ஒரு தத்துவம் ஆகும்.
உயிர் உதிப்பதுமே இவ்வாறுதான். ஒரு குழந்தை அழகான வடிவம் கொண்டு எங்கிருந்து உருவாகி வெளிவருகிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தோமானால் இந்தத் தத்துவம் நமக்குப் புரியும். அதனோடுகூடச் சேற்றுத் தண்ணீரில் முளைத்தெழுகின்ற தாமரையானது, சேற்றுத் தண்ணீரின் மயமாகிவிடுவதில்லை. சகதி தண்ணீரிலே கரையும். அதைத் தண்ணீரிலிருந்து மீண்டும் கழுவ முடியாது. ஆனால் ஒரு தாமரையின் இதழிலே சேறானது இரண்டறக் கலக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் தாமரை இதழானது தண்ணீரிலே கரைகின்ற உப்பைப் போன்றது இல்லை. அது தண்ணீரிலே முளைத்தெழுந்தாலும், தண்ணீரோடு ஒட்டியும், ஒட்டாமலே நிற்கிறது. பரம்பொருளின் தன்மையும் இதுவேயாம்.
பாரிலே முளைத்து நிற்கிற பரம்பொருளானது பாரினோடு ஒட்டியும், ஒட்டாமலும் நிற்கிற இந்தத் தன்மையை, தாமரை மலரோடு ஒப்பிட்டே சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் பாடியுள்ளார்கள்.. இவ்வாறுதான் தாமரை இலையும்கூட நிற்கிறது.. தண்ணீர்த்துளி அதன்மீது உருளுமே தவிர உட்கலக்காது. ஒட்டாமலே உருண்டு பிறழ்கிறது. இதுவே அதனுடைய தூய்மையின் இலக்கணம்.
அழுக்கில் பிறந்து, அழுக்கில் வளர்ந்தாலும், அழுக்கு அதைத் தொடுவதில்லை. பாரிலே கலந்து நிற்கும் பரம்பொருளும் இவ்வாறு தாமரை இலைத்தண்ணீராகவே நிற்கிறது.
இனி, இந்த மலரின் அழகு எத்தன்மையது? சேற்றிலே மலர்ந்த இத்தாமரையைச் சுற்றிப் பாசி படர்ந்திருக்கிறது. பாசிக்கு நடுவிலே நின்ற போதிலும் இம்மலர் ஒப்பற்ற எழிலோடு பூத்து நிற்கிறது. இதனை வடமொழிக் கவிஞன் காளிதாசன், ‘சரஸிஜம் சைவலேனாபி ரம்யம்’ என்று பாடுகிறான். பாசி சூழ்ந்திருப்பினும் தாமரை அழகோடு மிளிர்கிறது. இவ்வாறே வினைச் சுழல்களுக்கு நடுவிலே இறைவனுடைய கருணை மலர்ந்து நிற்கிறது. அழகு என்பது அதனுடைய மாண்பு. தூய்மை என்பது அதனுடைய சிறப்பு. இந்த மாண்பையும் சிறப்பையும் நாடுவது அடியார்களின் புகல் நாட்டமாகும்.
இத்தனை காரணங்களாலும் கருணை மிக்கத் தெய்வத் திருவடியைச் செந்தாமரை என்று அழைக்கும் மரபு தோன்றி வளர்ந்தது.. இதனையே ‘செந்தாமரைப் பூம்பாதம்’ என்கிறார் அவ்வையார்.
சீதம் என்பது குளிர்ச்சி அல்லது தண்மை. இதுவே வடமொழியில் தயை என அழைக்கப்படுகிறது. இறைவன் உயிர்கள்மாட்டுச் செலுத்தும் பெருங் கருணையை வியந்து பாடுகின்ற சித்தர்கள், இறைவன் திருவடியைக் குளிர் தாமரை என்றும், சீதத் திருவடி என்றும் சொல்வது இது காரணம் பற்றியே ஆகும்.
வினை வெம்மைக்குத் தண்மை ஊட்டுகிற இந்தத் திருவடியை, திருவடி நீழல் என்று அழைப்பதும் இதனாலேயேதான்.. வெயிலுக்கு நிழலைப் போன்று பிறவி வினைக்கு இத்திருவடி தண்மை தருகிறது .அவ்வையாரும் தமது தனிப்பாடல் ஒன்றிலே,
நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின்,
என்று பாடுகிறார். திருநாவுக்கரசரும், வீணைக்கும், நிலவுக்கும், தென்றலுக்கும், இளவேனிலுக்கும், பொய்கைக்கும் உவமை கூறி, ‘ஈசன் எந்தை இணையடி நீழ’லைப் பாடுகிறார்.
இறைவனுடைய திருவடி பிறவிதோறும் நம்மைத் தொடர்ந்து வருகின்ற தெய்வ ஆற்றலாகும். பிறவிதோறும் நம்மைத் தொடர்கின்ற இந்த நுட்பத்தை வாசனை என்று அழைப்பது சித்தர் மரபு………………………………………………………………………………………………………………………………………………………..
இந்தக் கருத்துக்களையெல்லாம் உள் அடக்கியே வாசனை பொருந்திய செந்தாமரைப் பாதம் என்று விநாயகரின் திருவடியை அழைக்கிறார் அவ்வையார். களபம் என்ற சொல் சந்தனத்துக்கு ஆகி, அது தருகிற நறுமணத்திற்கு ஆகிறது.
‘சீதக் களப்பச் செந்தாமரைப் பூம்பாதம்’எண்டு சொல்லும்போது, ஆன்மாக்களின் மலங்களுக்குள்ளே, அம்மலங்களை ஓட்டுவதற்குரிய கருணையோடும், தூய்மையோடும், ஆன்மாவைக் கவர்ந்திழுக்கும் எழிலோடும் விளங்குவதும், தண்மையும் வாசனையும் பொருந்தியதும் ஆகிய திருவடிப் பண்புகளைப் பாதத் தாமரைக்கு ஏற்றித் தமது அகவலைத் தொடங்குகிறார் அவ்வையார்.
இறைவன், மேடு பள்ளங்களில் விழுந்து தத்தளிக்கும் உயிர்களைக் காக்கும் பொருட்டு, தனது கருணையின் அழைப்பை இடையீடின்றி ஒலித்துக்கொண்டே இருக்கிறான். அந்த அழைப்பிலிருந்து நாம் காதுகளைப் பொத்திக்கொள்கிறோம். இதுவே வெவ்வினையின் தீச்செயல் என்றாலும் கருணாமூர்த்தியின் ஒலி நில்லாது ஒலித்துக்கொண்டே உள்ளது.
‘என் பாதத்தில் உன்னை ஒப்படைத்துவிடு’ என்று கீதையிலே பகவான் எத்தனையோ முறைகளில் மீண்டும் மீண்டும் உறுதி சொல்கிறான் அல்லவா? இதைத்தான் இறைவனுடைய கருணை ஒலி என்கிறோம். இந்தக் கருணையானது வெள்ளம் போல் ஓடுகிறது அதைத் துய்ப்பதற்குச் ‘சேரவாரும் செகத்தீரே’ என்று தாயுமானவர் அழைக்கிறார்.
ஓயாமல் ஒழியாமல் திருவடிக்கு அழைத்துக்கொண்டே இருக்கிற இந்தக் கருணையின் ஒலியையே பாதச் சிலம்பின் ஒலி என்று ஞானிகள் உருவகித்தார்கள். கருணைத் திருவடியை வந்தடையுங்கள் என்று அந்தத் திருவடியின் சிலம்பே பற்பல முறைகளிலே நம்மை அழைக்கிறது. இதனைத்தான் பாதச் சிலம்பின் பற்பல இசை ஒலிகள் என்று ஞானமரபு நமக்கு உணர்த்துகிறது. அவ்வையாரும் இதனையே ‘பாதச் சிலம்பு பல இசை பாட’ என்கிறார்..
தொடரும்…………