Post by Sumi on Mar 24, 2013 10:51:50 GMT 5.5
கலைமகள் திரு. சு. நடராஜன் பூர்வீகம் சிதம்பரம். இவரது தந்தை ஸ்ரீ ராஜகோபால ஐயர் சிவில் இன்ஜினியரிங் சூபெர்வைசர் ஆக, விழுப்புரம் அருகில் உள்ள கண்டாச்சிபுரத்தில் வேலை பார்த்து வந்த போது, திருகோவிலூர் அருகில் உள்ள, வசந்த கிருஷ்ணபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியவா, சாதுர் மாஸிய விரதம் முடித்து, நவராத்திரி பூஜைக்கும், அவ்வூரிலேயே தங்கி இருந்த போது, நவராத்திரியில் ஒரு தினம் தன் தந்தையுடன் அங்கு சென்று ஸ்ரீ சுவாமிகளை தரிசித்தார். இதுவே நடராஜன் முதல் தரிசனம்.
1953 இல் ஸ்ரீ பெரியவர்கள் சின்ன காஞ்சிபுரத்தில் சாதுர்மாச்யதுக்காக தங்கி இருந்தார். நடராஜன் தன் தகப்பனாருடன் அங்கு சென்றார். அப்போது சுவாமிகள் இவரிடம் 'என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?' என கேட்டார். இவர் 'எஸ்.எஸ்.எல்.சி.' தேறி விட்டு, சென்னையில் வேலை தேடி கொண்டு இருக்கிறேன்' என்றார்.
'உன் கையெழுத்து நன்னா இருக்குமா?' -சுவாமிகள்
இருக்கும் - நடராஜன்.
'மேலூர் ராமச்சந்திர ஐயர் ன்னு ஒத்தர், தாடி வெச்சுண்டு பூஜகட்டுலே இருக்கார். அவர் எழுதின காசி யாத்திரை டைரி செல் அரிச்சிடுத்து, அதை நீ ஒரு புது நோட்டு புத்தகத்திலே எழுதிடு'. என்று உத்தரவு இட்டார்கள் பெரியவர்கள்.
சுமார் ஆறு மாத காலம் மடத்தில் தங்கி இருந்து நடராஜன் எழுதினார்.
அவ்வளவு நாள் திரும்பி கூட பார்க்க வில்லை, பணி முடியபோகும் முதல் நாள் கூப்பிட்டு 'உன் வேலை எப்போ முடியும்?' என்று சுவாமிகள் கேட்டார்கள்.
அதற்கு முதல் நாள் தான் மேலூர் மாமா, நடராஜன் அவர்களிடம், 'இது முடியபோறது தானே? இன்னொரு நோட்டு புக் கூட ரொம்ப அழுக்கு படிஞ்சு இருக்கு. அதையும் நான் சொன்னதா பெரிவா கிட்ட சொல்லி, உத்தரவு ஆச்சுன்னா, எழுதிப்பிடு' என்றார்.
ஸ்ரீ பெரியவாளிடம் நடராஜன் 'நாளை முடிஞ்சிடும்' என்று சொல்லி விட்டு, மேலூர் மாமா சொன்ன புதிய வேலை பற்றி சொன்னவுடன், பெரியவா திடுக்கென்று 'சம்பளம் இல்லாம நீ இங்கே வேலை செஞ்சேன்னா உன் ஆயுசு பர்யந்தம் ஆளுக்கொருத்தர் ஏதாவது வேலை சொல்லிண்டே தான் இருப்பா, நீ நான் சொன்னதை முடிச்சு கொடுத்தா போறும்' என்று சொல்லி விட்டார்கள்.
மறுநாள் வேலை முடிந்தது. அதனை கேட்டறிந்து வேலைக்கு இனி முயற்சி செய்யும் படி நடராஜனிடம் பெரியவாள் உத்தரவு இட்டார்.
அதற்கு மறுநாள் மடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடராஜன் போய் வந்து கொண்டு இருக்கும் போது இரண்டு மூன்று தடவை ஸ்ரீ பெரியவா இவரிடம் 'வேலைக்கு என்ன முயற்சி பண்றே?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்து உள்ளார்கள். இவருக்கோ ஒரே குழப்பம், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடைசியில் அன்று இரவு யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல் கேட்ப்பார். நாம் நமஸ்காரம் செய்து விட்டு சொல்லி விடலாம் என்று அன்று முழுவதும் பல முறை குறுக்கும் நெடுக்கும் போய் வந்தும் இவரை கண்டு கொள்ளவே இல்லை. பல தடவை முயற்சித்தும் இவருக்கு இடம் கொடுக்கவே இல்லை.
கடைசியில் பூஜை முடிஞ்சு வெளியில் வரும் போது, சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு குறுக்கே வந்து நிற்பது போல் ஸ்ரீ பெரியவாள் எதிரில் நடராஜன் சென்றார். இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்றோ என்னவோ, அந்த தெய்வம் 'என்ன?' என்றது.
'பெரியவா பிரசாதம் கொடுத்து, உத்தரவு கொடுத்தா, மெட்ராஸ் க்கு போய் எதாவது வேலைக்கு முயற்சி பண்ணலாம் ன்னு இருக்கேன். '
'பிரசாதம் கொடுத்தா ஊருக்கு போறேன்னு சொல்றியா?' என்றார்கள்.
'ஆமாம்' என்றேன். 'சரி' என்று சொன்னதே தவிர பிரசாதம் கொடுக்கவில்லை.
புது பெரியவாள் பட்டாபிஷேகம் 1954 மார்ச் 22 ஆம் தேதி, காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி...
'வைபவம் முடிந்து அவா அவா ஊருக்கு கிளம்ப, பெரிய மனுஷா எல்லாம் பெரியவாளிடம் பிரசாதம் வாங்க க்யு வரிசையில் நின்னா.
க்யுவை கட் பண்ணிட்டு மேனேஜர் ஸ்ரீ விஸ்வநாத ஐயர், ஏதோ மடத்து விஷயமா பேச, பெரியவா இருக்கும் ரூம் உள்ளே போனா. அப்போ, ஸ்ரீ பெரியவா, அவரிடம், இப்போதான் திருவிடைமருதூர் மகாலிங்க ஐயர் பிரசாதம் வாங்கிண்டு வெளிலே போறார். அவர்கிட்ட நான்
சொன்னேன்னு சொல்லி, சிதம்பரம் ராஜகோபாலன், பிள்ளை, (மேனேஜர் க்கு சட்டென்று நினைவு வரவில்லை), அதான், உனக்கு எதுத்தாப்ல ஒக்காந்துண்டு டைரி எழுதினானே, அவனுக்கு ஒரு வேலை பண்ணி வெக்க சொல்லு என்றார்'.
மேனேஜர் தன் வேலையை முடிச்சிட்டு வெளிலே வந்தார். எதிரில் சுரேஷ்வர சுவாமி சந்நிதியில் ராவ்சாஹிப் ஸ்ரீ மகாலிங்க ஐயர் (ரிடயர்டு டெபுடி அக்கௌன்டன்ட் ஜெனரல்) அவர்கள், பெரியவா கொடுத்த பிரசாதத்தை காகிதத்தில் மடித்து கொண்டு இருந்தார். மேனேஜர் அவரை நெருங்கவும், நடராஜன் ஏதோ தற்செயலாக அங்கே சென்ற போது, அவரை அறிமுகம் செய்து வைத்து பெரியவர்களின் உத்தரவையும் தெரிவித்தார்.
பெரியவர்கள் அருளால், கலைமகள் காரியாலயத்தில் சேர்ந்து, ஆசிரியர் குழுவில், ஒருவனாக, எழுத்தாளனாக, முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
'கோலாகலமான வைபவத்தில், நெரிசலான நேரத்திலும் சிறு துரும்பாகிய என்னை நினைவில் கொண்டு கருணை மழை பொழிந்த அந்த தெய்வத்தை நான் நாள்தோறும் வணங்கி பணிந்து நிற்கிறேன்' என்பார் ஸ்ரீ நடராஜன் மாமா.
சுமார் நாற்பது ஆண்டுகள், கண்ணன், மஞ்சரி, கலைமகள் போன்ற பத்திரிக்கைகளின் உதவி ஆசிரியர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். வேலையில் இருந்து கொண்டே, மயிலை சம்ஸ்கிருத கல்லூரியில் படித்து சாதித்ய வேதாந்த சிரோன்மணி பட்டம் பெற்றார். மடத்தில் குருவாரம், அனுஷம், அவிட்டம், உத்திராடம், வருடாந்திர ஜெயந்தி வாக்யார்த்த சதஸில் கலந்து கொள்வதுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளு பண்டிதர்கள் பெயர், அவர்கள் பேசிய விஷயங்கள் குறித்து பதிவேடு பதிந்து ஆசார்யார்களிடம் வழங்குவார்.
உடல்நலம் குன்றி 2009 ஆம் ஆண்டு பெரியவா திரு அடி சேர்ந்தார், திரு. நடராஜன் மாமா.
source: facebook