Post by anusham163 on Jan 18, 2013 19:43:04 GMT 5.5
நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.
பகுதி------16
1971 இல் கொலம்பியா யுனிவெர்சிடியின் Ph.D பட்டத்தை நியூயார்க் நகரத்தில் பெற்றேன். அப்பொழுது, 1955இல் பாலார் நதிக்கரையில் பெரியவா அளித்த கீதோபதேசம் நினைவுக்கு வந்தது. “எவ்வளவு மேல் படிப்பு படிக்க முடியுமோ, அவ்வளவும் படி” டாக்டரேட் டிகிரீ என்பது, மேல்படிப்பில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்லலாம். ‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற தமிழ் வாக்குப் பிரகாரம், படிப்புக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஒரு எல்லை வரையறுக்க முடியாது. பெரியவா யுனிவெர்சிடியில் நான் ஒரு மாணவனாக இன்னும் தொடர்கிறேன். அங்கே, ஒவ்வொருவரும், முழுமனத்தோடும், ஆர்வமுடனும், பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், கடின உழைப்புடனும், மற்றவர்களை, உன்னிப்பாக கவனிப்பதுடனும், கேள்வி---பதில் மூலமாகவும், தளர்ச்சியில்லாத நம்பிக்கையுடனும், மௌனத்திலும் தியானத்திலும் தங்களை ‘இழப்பதன்’ மூலமும், உண்மையாகவும், நாணயமாகவும், வினயத்தோடும் இருப்பதன் மூலம், தங்களை மேலே மேலே உயர்த்திக் கொள்ளலாம்.
நியூயார்க்கில் இருந்தபொழுது, ஒழிந்த நேரங்களில், சில பொது சமூக சேவைகளில் ஈடுபட்டேன். அவைகளில் இரண்டு நிகழ்ச்சிகள் பெரியவா கவனத்திற்கு வந்தன. ‘Hindu Students Association of Columbia University என்ற அமைப்பை ஆரம்பித்தேன். இதில், ஆர்வமுள்ள மாணவர்கள் வாரத்தில் ஒருமுறை சந்தித்து, பிரார்த்தனை, தியானம், ஹிந்து மதம், வேதாந்தம் ஆகியவை பற்றிய சொற்பொழிவுகள் ஆகியவைகளை நடத்தினார்கள். துரதிருஷ்டவசமாக, நான் 1972இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்து சில வருஷங்களில் இந்த அமைப்பு மறைந்து போனது.
நான் நியூயார்க்கில் இருந்த சமயத்தில்தான், அமெரிக்காவிலேயே, முதல் ஹிந்து கோயில் கட்டப்பட்டது. இதற்கு வேண்டிய தொடக்கப்பணிகளை ஆரம்பித்து, விடாமுயற்சியுடன் உழைத்தவர், யுனைடெட் நேஷன்சில் ஆஃஃபீஸராக இருந்த, திரு அழகப்பன் அவர்கள். இதில் என்னுடைய பங்கு என்பது, ராமாயணத்தில் வரும் அணிலினுடையது போலாகும். இந்தக் கோயில் திட்டத்துக்கு, முதலில் விளம்பரம் செய்தது, ஹிந்து ஸ்டூடென்ட்ஸ் அசோசியேஷந்தான். நானும், பெரியவாளுடைய பூர்வாசிரம சஹோதரர் திரு. சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் மூலமாக, பெரியவாளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், திரு அழகப்பனைப் பற்றியும், அவர் எடுத்துள்ள இந்த பெரிய திட்டத்திற்கு பெரியவாளோட ஆசியையும், ஆலோசனையையும் வேண்டியும், எழுதியிருந்தேன். 1970 மேமாதம் 4-ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தின் நகலைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த வருஷம் கோடை காலத்தில், அழகப்பன், காஞ்சீபுரம் சென்று, பெரியவாளையும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளையும் சந்தித்து, ஆசி பெற்றார். நியூயார்க் திரும்பி வந்ததும், அழகப்பன் என்னிடம் கூறினார், “பெரியவாளை நான் ஒரு புராதனகாலத்து (CONSERVATIVE) சாமியாராக இருப்பார் என்று நினைத்தேன். சந்தித்தபின் அவர் ஒரு சீர்திருத்த சாமியாராக எனக்குத் தோன்றினார். நீங்கள் அந்தக் கடிதம் எழுதியதற்கு மிகவும் நன்றி.”
அப்பொழுது முதல், அழகப்பன் பெரியவாளின் ஒரு பெரிய பக்தராக ஆனார். பெரியவாள் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் ஆகியோரின் ஆலோசனைப்படி, அவர் பல மத சம்பந்தமான திட்டங்களை முன் நின்று நடத்தினார். அவர் இப்பொழுது ஓய்வு பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
1972இல் நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். ஐந்து வருஷங்களுக்குப்பின், நான், என் மனைவி, மற்றும் மகன் குருப்ரசாத் மூவரும் பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றோம். அவர் என்னைப் பார்த்ததில் மிக மகிழ்ச்சியுற்றார் என்று எனக்குத் தோன்றியது. அமெரிக்காவில் என்னுடைய அனுபவங்களை எல்லாம் விசாரித்தார். அமெரிக்காவைப் பற்றிய அவருடைய விஷயஞானம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஜனவரி 1973 இல் என்னுடைய இரண்டாவது மகன் ப்ரபாகர் பிறந்தான். 1974 செப்டெம்பரில், அண்ணாமலை நகரில் என் தந்தை உயிர் நீத்தார். பதின்மூன்றாம் நாள் காரியத்துக்கு, பெரியவா, எனக்கும், என் அண்ணா கணபதிக்குமாக இரண்டு சால்வைகள் அனுப்பியிருந்தார். இரண்டிலும், ‘பகவத் பாத சேவா’ என்று அச்சடிக்கப் பட்டிருந்தது.
1972 க்கும் 1980க்கும் இடையே, வேலைப் பளுவினால் பெரியவாளை சில முறைதான் சந்திக்க முடிந்தது. 1981 முதல், விடாமல், பல வெளிதேசங்களுக்கும் போக வேண்டியிருந்தது. அம்மா 1982இல் காஞ்சீபுரத்தில் உயிர் நீத்தார்.
1993 ஜனவரி 21—ஆம் தேதி அன்று பெரியவாளைத் தரிசனம் செய்த நிகழ்ச்சியோடு, இந்த என் கதையை முடிக்க விரும்புகிறேன்.
1993 ஜனவரி 18இல் என் மகன் குருப்ரசாத்திற்கும், சௌ.வித்யாவிற்கும், திருப்பதியில் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, நாங்கள் அனைவரும் பெரியவாளின் ஆசீர்வாதம் பெறுவதற்குக் காஞ்சீபுரம் சென்றோம். ஜனவரி 20 ஆம் தேதி வெங்கடேஸ்வரப் பெருமாளுக்குக் கல்யாண உற்சவம் நடத்திய பின், அடுத்த நாள் காலை புறப்பட்டோம். சீக்கிரமே போய்ச்சேர விரும்பினோம். ஆனால், ரூம் சாவிகளைத் தவறி எங்கோ வைத்துவிட்டதால் தாமதமாகி, காலை 9 மணிக்கே புறப்பட முடிந்தது. நாங்கள் பத்து பேர் இருந்ததால் மூன்று டாக்ஸிகளில் சென்றோம். 11 மணிக்குள் காஞ்சீபுரம் அடைய வேண்டும் என ட்ரைவர்களிடம் கூறியிருந்தேன். திருப்பதிக்கும் திருத்தணிக்கும் இடையே, மூன்று ரெயில்வே கேட்டுகள் உள்ளன. முதல் கேட்டை அடையும்பொழுது அது அடைக்கப் பட்டிருந்தது. இதனால் தாமதம் ஆயிற்று. இரண்டாவது கேட்டை அடையும் பொழுது, மணி 10=30. அதுவும் அடைக்கப்பட்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த சம்பந்தி ராஜகோபாலிடம், இன்று பெரியவாளைத் தரிசிக்கும் நம்பிக்கை எனக்கு இல்லை என்றேன். அப்பொழுது ஒர் ப்ரைவேட் கார், எங்களைக் கடந்து முன்னால், கேட்டுக்கருகில் சென்று நின்றது. அந்த வண்டியின் பின்புறத்துக் கண்ணாடியில், பெரிய கொட்டை எழுத்தில், “சந்த்ரசேகர்” என்று எழுதப்பட்டிருந்தது. ராஜகோபாலிடம் விளையாட்டாக, “ அந்த சந்த்ரசேகர் உதவிக்கு வந்தாலொழிய, கேட் திறக்காது” என்று கூறினேன். அவருக்கு நான் சொன்னதின் அர்த்தம் விளங்கியிருக்காது என்று எண்ணி, விளக்கிக் கூறினேன், “சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி உதவிக்கு வந்தாலொழிய, கேட் திறக்காது, காஞ்சீபுரத்திற்கு நேரத்தில் போய்ச் சேர முடியாது”
வாசகர்கள் நம்புவார்களோ என்னவோ, அந்த சமயத்தில், அந்தக் காரின் டிரைவர், கீழே இறங்கி, கேட்கீப்பரிடம் சென்று பேசிவிட்டுத் திரும்பி வந்து காரில் உட்கார்ந்தார். உடனேயே, கேட் திறக்கப்பட்டது! அந்தக் கார் முன்னே விரைந்து செல்ல, எங்களுடைய மூன்று டாக்சிகளும் அதைப் பின்பற்றி விரைந்து கேட்டைக் கடந்தன எல்லா வண்டிகளும் மூன்றாவது கேட்டை அடைந்தபொழுது, அதுவும் அடைக்கப்பட்டிருந்தது! நான் ராஜகோபாலிடம் “இங்கேயும் அதே மாதிரி நடக்கணும்” என்று பிரார்த்திப்பதாகச் சொன்னேன். அதே மாதிரி நடந்தது! கொஞ்ச தூரம் கழித்து, அந்தக்கார் வேறு திசையில் சென்று விட்டது. ராஜகோபாலன், அதில் இருந்தது ஆந்திர மாநிலத்தின் மந்திரியோ, பெரிய ஆஃஃபீஸரோவாக இருக்கவேண்டும் என்று யூகித்தார். நான் அதற்கு, “இது எனக்காகப் பெரியவா செய்த ஒரு ஏற்பாடு!” என்றேன்.
அந்தக் கார் யாருக்கு சொந்தம் என்றோ, இல்லை இது ஒரு தற்செயலாக நடந்த காரியம் என்றோ,, அல்லது ஒரு அற்புதம் என்றோ நான் லக்ஷியம் பண்ணவில்லை. கேட்கீப்பர் செய்தது சரியா என்றும் நான் ஆராயவில்லை.
சரியாக 11=40க்கு காஞ்சி மடத்தை சென்றடைந்தோம். அண்ணா கணபதியும், மன்னியும், அங்கே ஏற்கெனவே வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். பெரியவா தரிசனம் குடுத்து முடிக்கப் போவதால், அங்கே சீக்கிரம் போகவேண்டும் என்று அண்ணா கூறினார். 11==50க்கு பெரியவாளின் முன்பு நின்றுகொண்டு, “ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர’ என்று ஜபித்துக் கொண்டிருந்தோம். பெரியவாளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எங்கள் நண்பர்கள், எங்களை ஒவ்வொருவராக பெரியவாளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். முதலில் என் சம்பந்திக்கும், பின்னர் கல்யாணத் தம்பதிகளுக்கும், பிறகு மற்றவர்களுக்கும் பெரியவாளிடமிருந்து பிரசாதம் கிடைத்தது. சீக்கிரமே, திரை மூடப்பட்டது. பிறகு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸ்வாமிகளையும், ஜெயேந்திர ஸ்வாமிகளையும் தரிசனம் செய்து அவர்களுடைய ஆசிகளைப் பெற்றோம். மருமான் சந்த்ருவின் வீட்டில் மதிய உணவு உண்டுவிட்டு,, காமாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போய் விட்டு, அன்று மாலையே சென்னையை அடைந்தோம். அடுத்த நாள் என் இரண்டாவது பையன் பிரபாகருடன் நான் அமெரிக்காவுக்குக் கிளம்பினேன்.
இதுவரை கூறிவந்த பெரியவாளுடனான என் அனுபவங்களில், பெரியவாளை, நான், ‘என்னோட பெரியவா’’, ‘பெரியவா’, ‘கருணாமூர்த்தி’, ‘தெய்வம்’ என்றெல்லாம் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். தெய்வம் என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்லவோ, பெரியவாளே தெய்வம்தான் என்று நிரூபிப்பதற்கோ நான் முயலவில்லை. அது என்னால் முடியுமா? அதை நான் வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன். மேக்ஸ்முல்லர் ராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றிக் கூறியது போல், ‘பெரியவா மனிதனும், தெய்வமும் சேர்ந்த ஒரு அற்புதமான கலவை” என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். என்னைப் பொறுத்த மட்டில், 15 நீண்ட வருஷங்கள் நான் கடவுளுடன் வாழ்ந்தேன் என்பது மட்டும் நிச்சயம்.
முடிவுற்றது.