Post by Sumi on Dec 13, 2012 15:34:42 GMT 5.5
நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.
கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.
சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.
"கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்".
வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?
"நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?
"ஆமா"
"அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?
அதிர்ச்சியோடு "ஆமாம் " என்றார்கள்.
"மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!", என்று அவர்களுக்கு வியப்பு.
"நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ", என்றார்.
கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.
"சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்", என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.
மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?
சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.
பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.
முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.