Post by anusham163 on Nov 12, 2012 15:07:18 GMT 5.5
மஹாபெரியவா ஸித்தி அடைந்த அன்று, அவரைத் தரிசித்தவர் திரு. மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். சுமார் பத்து வயதில் காஞ்சி மடத்துடன் இவருக்கு ஏற்பட்டப் பழக்கம் இன்றும் தொடர்கிறது ( இது எழுதப்பட்டது மே மாதம் 2000 ). 1994--ஆம் வருடம் ஜனவரி மாதம் எட்டாம் தேதி பிற்பகலில் பரமாச்சாரியார் ஸித்தியடைந்ததற்கு முன்பு, கடைசியாக அவருடன் பேசியவர் மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்தான். அதைப் பற்றி அவரே சொன்னது.
கல்கி பத்திரிகையின் 21--5--2000 ஆண்டு இதழுடன் ஒரு இணைப்பு வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு "எந்நேரமும் உன் சந்நிதியில்" என்பதாகும் மேலே சொன்ன நிகழ்ச்சி, அவ்விணைப்பில் வெளியானது. அதைக் கீழே தந்துள்ளேன்.
பட்டு சாஸ்திரிகள் சொல்கிறார்:
"பெரியவாள் ஸித்தியடைந்த தினமான 1994 ஜனவரி எட்டாம் தேதி நான் அவரை தரிசித்த அனுபவத்தைச் சொல்கிறேன். பெரியவாள் தமது அறையில் படுத்திருந்தார். கால் முதல் பாதி உடம்பு போர்த்தியிருந்தது. அன்று பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரமான அனுஷம் என்பதால் வழக்கப்படி மடத்திலே ஹோமம் செய்துவிட்டுப் பிரஸாதத்தை எடுத்துக்கொண்டு அவரது அறை இருந்த பக்கம் போனேன். மணி பன்னிரெண்டே முக்கால் இருக்கும்.
"ஹோமம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. இதோ பிரஸாதம். பெரியவாளிடம் சேர்த்துவிடுங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் சொன்னபோது, " நீங்களே உள்ளே போய் கொடுத்து விடுங்களேன்" என்று சொன்னார்கள். உள்ளே போய் பெரியவாள் அருகில் குனிந்து நின்றேன்.
"யாரு?" என்று அவர் கேட்க, உடனிருந்த வேதபுரி என்பவர், " மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்" என்றார்.
"அப்படியா?" என்று கேட்டுக்கொண்டவர், என் பக்கமாய்த் திரும்பி, "சௌக்கியமா?" என்றார்.
:சௌக்கியமா இருக்கேன்" என்றேன்.
"எல்லாரும் க்ஷேமமா இருங்கோ! என்று சொல்லிவிட்டு உடனே அதையே இன்னொரு தடவையும் திருப்பிச் சொன்னார்.
இதற்குப் பல நாட்கள் முன்பிருந்தே யாருக்கும் பெரியவாள் தரிசனம் தரவில்லை. பேச்சும் மிகவும் குறைந்துவிட்டது. என்னிடம் பெரியவாள் சில வார்த்தைகள் பேசியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. வெளியில் வருகிறபோது, நான் அழுதுவிட்டேன்..
அதன் பின்பு பெரியவாள் யாரிடமும் பேசவில்லையாம். சரியாக பிற்பகல் இரண்டு மணி ஐம்பத்துமூன்று நிமிடத்திற்கு ஸித்தியடைந்துவிட்டார்!