Post by anusham163 on Oct 28, 2012 22:41:01 GMT 5.5
யதோக்தகாரி:
சொன்னவண்ணம் செய்த பெருமாள்.
(The story of Orikkai, the place where Mahaperiava’s manimantapam has been built)
(As told by Mahaperiava)
“சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்ற பெயரிலேயே காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலில் பகவான், மஹாவிஷ்ணு இருக்கிறார். “யதோக்தகாரி” என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். ‘யதோக்த’—‘யதா+ உக்த:’, ‘சொன்னபடி’, ‘சொன்னவண்ணம்’, காரி’---செய்பவர்.
யார் சொன்னபடி பெருமாள் செய்தார்?
குருவாக இருக்கப்பட்ட ஒருவர், தன் சிஷ்யன் ஊரை விட்டுப் போகிறானா, அப்போது பெருமாளும் அவன் பின்னே துரத்திக் கொண்டு ஓடவேண்டும்; அப்புறம் அவன் ஊருக்கே திரும்பி வருகிறானா, அப்போதும் அவன் பின்னேயே துரத்திக்கொண்டு வந்துவிட வேண்டும், என்று ‘ஆர்டர்’ போட்டார்! அவர் சொன்னபடியெல்லாம் பகவானும் பண்ணினான்; ‘யதோக்தகாரி’ என்று பெயர் வாங்கினான்.
அந்த குரு யார்? சிஷ்யன் யார்? ஏன் இப்படி (குரு) ஆர்டர் போட்டார்?
கொஞ்சம் கதை கேட்கலாம்..
ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் என்பவர் ஒருவர். பூந்தமல்லிக் கிட்டே இருக்கும் திருமழிசையில் பிறந்து வளர்ந்தவராதலால், ஊரை வைத்தே அவர் பேரைச் சொன்னார்கள்…………………
அப்புறம் அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து வாஸம் பண்ணிக்கொண்டிருந்தார். அங்கேயிருக்கிற ஒரு பெருமாள் கோயிலிலே பாசுரம் பாடிக் கொண்டும், உபதேசம் பண்ணிக் கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் போய்க்கொண்டும் இருந்தார்..
-………………………………………………………………………………………………………………….
அவர் வாஸம் பண்ணிக்கொண்டிருந்தது, காஞ்சியில் உள்ள பதினாலு திவ்ய தேசங்களுக்குள் ஒன்றான திருவெஃகா என்பதிலாகும்.
கணிகண்ணன்:
அருள் நெஞ்சும் அஞ்சானெஞ்சும்.
அவருக்கு (அந்தப் பெருமாளுக்கு) யதோக்தகாரி என்ற பெயர் வருவதற்கு முற்பட்ட காலத்திலேயே திருமழிசையாழ்வார் அவரை இஷ்டமூர்த்தியாக உபாஸித்துக் கொண்டிருந்தார்.. அவருக்கு அத்யந்த சிஷ்யனாக ஒரு பையன், கணிகண்ணன் என்று பேர். அவன் பிறந்ததே ஆழ்வார் அனுக்ரஹத்தில்தான். அவனுடைய பெற்றோருக்கு ரொம்ப காலமாக ஸந்ததியில்லை. அவர்கள் நித்யம் ஆழ்வாருக்குப் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். யோக நிஷ்டையிலேயே போய்க்கொண்டிருந்த ஆழ்வார் எப்போதாவதுதான் கண்ணைத் திறப்பார். எதுவும் ஆகாரம் பண்ணுவதில்லை. இந்தப் பாலை மட்டும்தான் கொஞ்சம் குடித்துவிட்டு பாக்கியை அவர்களுக்கே கொடுத்துவிடுவார். ப்ரஸாதமாக அவர்கள் அதைக் குடிப்பார்கள். அதன் பலனாகத்தான் அவர்களுக்குப் புத்திரன் பிறந்தான்..
கணிகண்ணன் என்ற அந்தப் பிள்ளை குழந்தை நாளிலிருந்தே ஆழ்வாரிடம் வந்து அந்தரங்க சிஷ்யனாகி விட்டான்..
ஒரு நாள் அவன் கோயிலுக்குப் போகும்போது அங்கே ஒரு தொண்டு கிழவி, முதுகு நன்றாகக் கூனிப்போனவள், எலும்பும் தோலுமாக ரொம்பவும் ச்ரமப்பட்டுக்கொண்டு, பெருக்கி, மெழுகி, கோலம் போட்டுக் கைங்கர்யம் செய்வதைப் பார்த்தான். உடம்பு கொஞ்சம் கூட முடியாவிட்டாலும் மூச்சுப்போகும் வரையில் பகவத் கைங்கர்யம் பண்ணாமலிருப்பதில்லை என்ற த்ருடமான பக்தியிலேயே அவள் தொண்டு புரிவது தெரிந்தது. கணிகண்ணனுக்கு அப்படியே மனஸ் உருகிவிட்டது. ‘ஐயோ இவளுக்கு நாம் உபகாரம் பண்ண வேண்டாமா? எப்படிப் பண்ணுவது?’ என்று மனஸார நினைத்தான்.
இந்த மாதிரிப் பெரிசாக ஒரு காருண்ய சிந்தனை வந்தால் அப்போது தன்னால் குருவுடைய அனுக்ரஹ சக்தி சிஷ்யனுக்குள்ளும் ஆவிர்பவித்துவிடும். ஈஸ்வரனிடமிருந்து குரு பெற்றிருக்கிற சக்தியை குருவிடமிருந்து சிஷ்யனும் பெற்று விடுவான். அவ்விதத்தில் ஆழ்வாரின் அனுக்ரஹ சக்தி அந்த நிமிஷத்தில் கணிகண்ணனுக்கே வந்துவிட்டது.
தன்னை மறந்த நிலையில் அந்தக் கிழவியிடம் போய் அன்போடு அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான்.
உடனே அனுக்ரஹ சக்தியினால் அவளுடைய கூன்முதுகு நேராக நிமிர்ந்தது. அது மட்டுமில்லை. எலும்பும் தோலுமாக விருத்த தசையிலிருந்த கிழவி அந்த க்ஷணத்திலேயே நல்ல ஆரோக்யமுள்ள யுவதியாக மாறிவிட்டாள்!
தொடரும்…………