Post by anusham163 on Oct 7, 2012 15:09:58 GMT 5.5
Here is a very emotional narrative saying how Mahaperiava took the blame on Himself! What is the blame and whose mistake? Yes OUR mistake----of not trying to return to the vaedhantha path of life instead of going on feeding our desire--desire for more and more and more!, in spite of His repeated request to all.
And an incident, when He, with His Sarana kamalam and Hastha kamalam , brought rain!
SOURCE------Kanchi munivar Ninaivuk Kadhambam.
Author-------Ra.Ganapathy
Publisher---Divya vidhya trust.
This was written by Ra.Ganapathy anna, after Mahaperiava left His mortal 'sareeram'
‘சரணம்’ ‘ஹஸ்தம்’ என்ற இரு பதங்களுக்குமே ‘தாங்கி’ என்ற பொருள் உண்டு. தாங்குவது தாங்கி (support). சரண கமலத்தால் அடைக்கலம் தந்தும் ஹஸ்த கமலத்தால் அபயம் தந்தும் எண்ணிறந்த அடியாரைத் தாங்கிய திவ்யத் திருமேனி மறைந்து விட்டது.
ஆனால் தாங்கும் அப்பேரருளை அந்த மேனியும் அதன் அவயவங்களுமா புரிந்தன? பௌதீகமான பொருட்களைத்தான் பௌதீகமான மேனி தாங்க முடியும். அடியாரின் மனச் சுமையை, வாழ்க்கைச் சுமையை ஒரு பௌதீக மேனி எப்படித் தாங்க முடியும்? அதைத் தாங்கியது பராசக்தியின் பரங்கருணைத் தத்வந்தான். அது எக்காலத்தும், எவ்விடத்தும் உள்ள அமரமான, ஸர்வ வியாபகமான ஒன்று. ஆயினும் அந்த ஸூக்ஷ்ம சக்தியைக் கிரஹிக்க மாந்தரால் இயலாததால் அவர்களுக்கு அவதார சரீரங்களைக் காட்டி அவற்றைக் கருவியாகக் கொண்டு, தனது தாங்கும் தண் பேரருளைப் புரிகிறது. எனினும் பராசக்தியின் விளக்கவொண்ணா விளையாடலில் சரீர தர்மமாக இவ்வளவுதான் ஆயுட்காலம் என்று விதி செய்யப்பட்டு அதோடு சரீரம் முடிக்கப்பட்டும் விடுகிறது. அவதார சரீரமும்தான். இவ்வாறிருந்தாலும் அந்த ஆயுட்காலத்தில் சரீரி ஆற்றிய தாங்கும் திருப்பணியின் பெருமையிலிருந்தே அடியார்கள் அவரை ஒரு சரீரத்துள் அடக்கவொண்ணாத அருட்சக்தியாகப் புரிந்து கொள்ள இயலும்.
எனவே ஒரு அவதார சரீரம் விழும்போது, நம் கண் காண, செவி கேட்க, உள்ளம் குளிர அது புரியும் நவ நவ ஸுந்தர லீலைகள் முடிந்து போவதால் துயரம் பொங்கி எழுவது இயல்பேயாயினும், பிரார்த்தனையால் மனம் தெளிந்து பார்ப்போமாயின், சரீரமல்ல நம்மைத் தாங்கிக் காத்தது என்றும், அத் தாங்கு சக்தி, காப்பு சக்தி இன்றும் நம்மைச் சூழ்ந்தும், ஊடுருவியும் உள்ளது; இனி என்றும் அது அவ்வாறே இருக்கும் என்றும் உணரலாம். வெறும் வாய் ஜோடனையாகவோ, மனோ கல்பிதமாகவோ இன்றி மெய்யாலுமே உணரலாம்.
“ஜீவேம சரத: சதம்” என்ற வேத வசனத்திலிருந்து ஒரு குழந்தை தும்மினால் கூட “சதாயுஸ்” என்று சொல்லும் பொது வசனம் வரை நமக்குத் தெரிவிப்பது, ஒரு சரீரத்தில் அதிக பக்ஷ ஆயுட்காலம் நூறாண்டு என்பதே. “நூறுதல்” என்றாலே அழிதல் என்றும் பொருள்!
அப்படிப்பட்ட அதிக பக்ஷ கால அளவாக்கும் ஸ்ரீசரணர்கள் பரம கருணையுடன், பரம பொறுமையுடன், அந்த தர்ம விக்ரஹமான சரீரத்தால் எங்கணும் நிலவி வரும் அதர்மக் கலி கோலாஹலத்தைத் தாங்கிவிட்டுச் சரீரத்தை உதிர்த்திருக்கிறார்கள். மக்கள் யாவரும் தர்ம வழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதே நீண்ட நெடும் ஆண்டுகள் அல்லும், பகலும் அனவரதமும் சிந்தனையாக, சொல்லாக, செயலாக, பிரார்த்தனையாக, அநுக்ரஹமாக இப்படி வாழ்ந்த அப் பரம ஸ்ரேஷ்டமான அவதாரத்தால் பெறக்கூடிய பயனை வேண்டுமென்றே தவற விட்டுவிட்டவர்தான் நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள். ‘அவரைப் போற்றிப் பெருமை பேசிவிட்டால் போதும்; அவர் நம்மைப் போற்றிப் பெருமைப் படுமாறு ஏதுமே செய்யாமல் நம் வழியிலேயே போகலாம்’ என்றுதான் இருந்திருக்கிறோம். அப்படியும் நம்மைத் தூற்றாமல், சபிக்காமல், தன்னையும் நொந்து கொள்ளாமல், கீதோபதேசத்தின் சிகர உதாரணப்படி வெற்றி—தோல்வி கருதாமல் அவதார ஸ்வதர்மமான தர்மப் புனருத்தாரணத்திற்கே முழு மூச்சுடன் பாடு பட்டுவிட்டு, பாடும் தெரியாமல் புஷ்பம் போல் ஆனந்த மலர்ச்சியுடனேயே தாமும் இருந்து உலகுக்கும் ஆனந்தத்தையே அள்ளி அள்ளி அருளிவிட்டே பூர்ணாயுள் முடியும் தருணத்தில் சரீரத்தை உதிர்த்திருக்கிறார்கள்.
இன்று அவரை நினைத்து துக்கிப்பதை விட நம்மை நினைத்தே துக்கித்து ஆத்ம சோதனை செய்து கொண்டால் நலனும் பயனுமாக இருக்கும். அவ்வாறு செய்தால் பரிவே உருவான அப்பரம மூர்த்தியின் அருட்சக்தி நம் துக்கத்தைத் துடைத்து நம்மைத் தூயோராகத் தூக்கி விடும்.
ஒரு புறம் பரம ஸ்ரேஷ்ட அவதார சரீரத்தை நடமாடும் தெய்வமாக நூறாண்டு உலவ விட்டும், மறுபுறம் அவதாரப்பணி என்று விசேஷமாக வேத மார்க்க மறுமலர்ச்சி நிகழவொண்ணாமல் கலிப் பிரவாஹத்தைப் பெருகவிட்டும் விளையாடிய அந்தக் கருணை---மாயைக் கலவையான பராசக்த்யின் சித்தம் என்னவோ? வேதம் அடியோடு அடித்துப் போகப்படாமல் ஓரளவேனும் அணைபோட்டும், ஆத்மதீபம் அணைந்தே போகாமல் பொறியளவேனும் நிற்கவும் அவதாரம் நிச்சயமாக உதவியுள்ளது அன்றோ? அவ்வளவே அவள் திட்டமிட்டது போலும்!
ஸ்ரீசரணர்கள் 1957 ஸெப்டம்பர் பிற்பகுதியிலிருந்து 1959 மார்ச் முற்பகுதி வரை, சுமார் ஒன்றரை ஆண்டுகள் சென்னயில் தங்கிவிட்டுப் புறப்படும்போது அளித்த பிரிவுபசாரக் கூட்டத்தில் பேசிய பலரும், மேலே கூறியுள்ள அதே ஆத்ம சோதனையைத்தான் பிரஸ்தாவித்து, ‘இனிமேலாவது நாம் பெரியவா உபதேசப்படி நடக்க வேண்டும்’ என்றனர்
முடிவாக, முடிமணியாகத் தமது அமுதக் கருணையையே உருக்கி வாக்குகளாக வர்ஷித்த அவதாரர், “ நான் உங்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நித்யமும் சொல்லியும் செய்ய முடியாதவர்கள் நான் போன பிறகு அப்படிச் செய்யணும் என்றால் எப்படி?’ என்று கேட்டுவிட்டு, இக்காலத்தில் மக்களை சாஸ்திரீய வாழ்க்கை முறையிலிருந்து இழுக்கும் பலவிதமான போக்குகளுக்கு எதிர்நீச்சுப் போடுவதில் உள்ள சிரமத்தை மனமார்ந்த அநுதாபத்தோடு எடுத்துக் கூறினார்கள். தொடர்ந்து பரேமோபநிஷத் மஹாமந்திரங்களாகத் திருவாய் மலர்ந்தார். “ நான் சொல்லி, நீங்கள் செய்யவில்லை என்றால் அது உங்கள் தப்பில்லை. உங்களைச் செய்யப்பண்ணும் சக்தி என் சொல்லுக்கு இல்லை என்றே அதற்கு அர்த்தம். அதாவது என் தபஸ் போதவில்லை என்றே அர்த்தம். நான்—நீங்கள் வேறே வேறே இல்லை; ஒன்றேதான். நீங்களெல்லாம் என் அங்கங்கள்தாம். அதனால் நீங்கள் இப்போது ஒன்றும் குறையே பட்டுக்கொள்ள வேண்டாம். ‘அப்படிப் பண்ணலியே, இப்படிப் பண்ணலியே’ என்று வருத்தப்பட வேண்டாம். நான்தான் என்னை ஸரிப்பண்ணிக் கொள்ள வேண்டும். அப்போது நீங்களெல்லாமும் ‘ஆடொமாடிக்’ காக சரியாகி விடுவீர்கள்.”
ஸரிக்கு நூறு சதவிகிதத்திற்கு மேலும் ஸரியான பரிபூர்ண புருஷர் அன்பின் முழுமையில் கூறிய வாசகமேயன்றி அதல்ல யதார்த்தம்! சேயின் நோயைத் தாயாய்த் தாங்கிய பங்கில் பகர்ந்த வாசகமே அது.
“நான் உங்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நித்யமும் சொல்லியும் செய்ய முடியாதவர்கள் நான் போன பிறகு…” என்று அன்று அவர்கள் கூறியதுதான் இன்று ஆழ்பொருளோடு நினைவில் தைக்கிறது.
அவநம்பிக்கைச் சித்தாந்தத்தில் இக்கட்டுரையை முடிக்க வேண்டாம். “நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு.” அந்த அடைக்கல சரணத்தையும் அபய ஹஸ்தத்தையும் நம்பினால், “ஜயமுண்டு பயமில்லை.”
காவியம் பல எழுதலாம், சரண---ஹஸ்த மஹிமை காட்ட. ஒரே ஓர் உதாரணம்.
1941—ஆம் ஆண்டு சாதுர்மாஸ்யத்தின்போது ஸ்ரீசரணாள் நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தார். அதனிடையில் ஆடிப்பூரம் வந்தது. வழக்கமாக அப்போது நீலாயதாக்ஷி அம்பாளுக்கு மிகவும் விமரிசையா உத்ஸவம் நடக்கும். ஆனால் அவ்வாண்டு? ஊர் மழை கண்டு எத்தனையோ காலமாகியிருந்த சமயம். சொல்லி முடியா தண்ணீர்ப் பஞ்சம். குளம், குட்டை, கிணறு யாவும் வறண்டு கிடந்தன.
எனவே உத்ஸவத்துக்கு யாத்ரீகர்கள் வரவேண்டாமென்றே அறிக்கை விடுவதற்குக் கோவிலதிகாரிகள் எண்ணினர். எனினும் அதற்கு முன் தங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள மஹானிடம் விண்ணப்பிக்க நினைத்து ஸ்ரீமட முகாமுக்கு ஒருநாள் காலை வேளையில் வந்தனர்.
அவர்கள் குறையிரந்ததை சோகம் என்றே கூறக்கூடிய ஆழுணர்ச்சியுடன் அருள்மூர்த்தி கேட்டுக் கொண்டார். வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை. சொல்ல அவசியமில்லாமல் அடியோடு முடி அவரது திருவுருவே இரக்கத்தின் உருக்கமாக இருந்தது. மௌனமாகவே பிரசாதம் ஸாதித்து அவர்களை அனுப்பிவிட்டு ஏகாந்தத்திற்குச் சென்று விட்டார்.
அரைமணி ஆனபின் ஆலயத் திருக்குளத்திற்குச் சென்றார். குளமாகவா அது இருந்தது? தள்ளித் தள்ளிச் சில இடங்களில் குளம்படி நீர் தேங்கியிருந்தது தவிர மற்ற இடமெல்லாம் காய்ந்த பூமியாகவோ, சேறாகவோதான் இருந்தது.
தேடித் தேடி ஒரு சிறிய குழியில் தமது சின்னஞ்சிறு ஸ்ரீ சரணங்களை ஸ்ரீசரணர் அழுத்த, சீரார் சேவடி அமிழும் அளவுக்கு---அந்த அளவுக்கே--- நீர் சுரந்தது.
ஆச்சரியமாக, தனது அப்பாத நீரையே அவர் சிரஸில் புரோக்ஷித்துக்கொண்டார்!
முகாமுக்குத் திரும்பினார் முனிவர்.
அன்று பகலெல்லாம் கடும் வெயில் காய்ந்தது.
மறுநாள் மதியம் மறுபடி திருக்குளத்திற்குச் சென்றார்..
முன்தினம் கண்ட குளம்படித் தேங்கல்களும்கூட சேறாகவோ, காய்ந்த கட்டி மண்ணாகவேயோ சுவறிக்கிடந்தன!
இன்று திவ்ய ஹஸ்தத்தாலேயே அவற்றிலொரு சேற்றுத்திட்டைச் சுரண்டினார். ஒரு சில துளிகள் நீர் சுரந்தது.
வலப்பாதப் பெருவிரலை அதில் ஐயன் அமிழ்த்த அது போதும் போதாததாக முழுகியது..
திருவிரல் நீரில் நனைந்திருக்க, நனைந்த திருவுள்ளத்தோடு ஐயன் ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கினார்.
ஈரப்பசையே இல்லாத வெண்மேகங்கள் ஆங்காங்கு மூடியிருந்தாலும் பெரும்பாலும் தெள்ளிய ஒளி நீலமாகவே வானம் விளங்கியது.___கருணா சோக ( கருண ரஸம் என்பதே சோகந்தானே!) மேகம் மூடியுங்கூட, மூடவொண்ணா அகண்ட அமைதி வெளியாக!.
தண்டத்தை இறுகப் பிடித்தவாறே, வானை நோக்கி இரு கரங்களையும் தூக்கி அஞ்சலி செய்தார்.
அருளும் அமைதியும் இனம் பிரிக்க முடியாமல் செறிந்திருந்த மௌனத்துடன் மட முகாமுக்குத் திரும்பினார்.
பிற்பகல் நான்கு மணியளவில் ஈரமற்ற வெண்முகில்கள் குளிர் நீலமாக மாறத்தொடங்கின. வெப்பத்தைச் சமனம் செய்யும் சீதக் காற்றும் மெல்ல வீசலாயிற்று.
சிறிது பொழுதில் சிறு தூறல்கள் சிதறலாயின.
அப்புறம் அது அடர்ந்து அடர்ந்து அப்படியே அடைமழையாகப் பொழியலாயிற்று!
இரவெல்லாம் பொழிந்தது.
மறுனாள் முழுதும் பொழிந்தது.
அதற்கு மறுநாளும்,ஏன், நான்காம் நாளும்கூட விடாமல் பொழிந்தது.
நிமலனின் அருள் வேண்டுதல் வடிவில் தூண்ட, நீலாயதாக்ஷி நீலவானையே கண்களாகக்கொண்டு கருணா கடாக்ஷப் பெருக்காகப் பொழிந்து தீர்த்தாள்!
------------------நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையே!
என்ற வாதவூரார் வாசகம் மெய்யாயிற்று.
குளம், குட்டை, கிணறு எல்லாம் முட்ட முட்ட நிரம்பின.
ஊர் குளிர, ஊரார் உளம் குளிர உத்ஸவமும் வழக்கத்தைவிட விமரிசையாக நடந்தேறியது. வாடிய நெஞ்சங்களுக்கு வான் கருணை வழங்கிய உத்ஸாகத் தளிர்ப்பே உத்ஸவ விமரிசை வழக்கத்தைவிடக் கூடியதற்குக் காரணம்.
இந்த நிகழ்ச்சிக் கோவையை உடனிருந்து கண்டு உவகையோடு வர்ணிக்கும் செல்லம்மாள்( 1993—ல் பரம பதம் எய்திய நீண்ட காலப் பரம பக்தை) சொல்வாள்: “ கோவில்காரர்கள் யாத்ரிகர் வர வேண்டாமென்று அறிவிப்பு செய்ய நினைத்தார்கள். பெரியவாளோ ஆகாசராஜனையும், வருணபகவானையும் கொண்டு அம்பாள் உத்ஸவக் கல்யாணத்திற்கு அத்தனை பேரும் வருவதற்கு அழைப்பு அனுப்பி விட்டார்! கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால், நம்முடைய குரு பரமாத்வாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கனமழையை வருவித்து விட்டார்.!”
ஆயினும் கண்ணன் போலத் தெய்வீக மகிமையை வெளிக்காட்டாது ஸ்ரீராமனைப் போல் மானுடமாகவே எளிமை காட்டியவரன்றோ நம் பரம குருநாதன்? அதனால்தான் ஸ்ரீ சரண மஹிமையை மறைத்துக் கரங்களை எளிமையில் குவித்து வானை நோக்கி அஞ்சலி செய்தே மழை வருவித்ததாகக் காட்டினார்!