Post by Sumi on Apr 5, 2012 8:16:26 GMT 5.5
துறவியான ஆதிசங்கரர் காசி மாநகரில் மணிகர்ணிகை என்ற இடத்தில் தங்கி இருந்தார். சீடர்கள் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்களில் சனந்தனர் என்பவர் குரு பக்தியில் மற்றவர்களை மிஞ்சியவராக இருந்தார். ஆதிசங்கரரும் அவரிடம் அதிக அன்பு காட்டினார். இதனால் மற்ற சீடர்கள் சனந்தனர் மீது பொறாமை கொண்டனர்.
இதை அறிந்த ஆதிசங்கரர், மற்ற சீடர்கள் சனந்தனரின் பெருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். வழக்கம்போலக் கங்கைக் கரையில் அவர் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கங்கை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
சனந்தனரைப் பார்த்து அவர், ""சனந்தனா! கங்கை ஆற்றில் நடந்து அக்கரை சென்று திரும்பி வா!'' என்றார். இதைக் கேட்ட சனந்தனர் தண்ணீரின் மேல் தன்னால் நடக்க இயலுமா என்று சிந்திக்கவில்லை. குருவின் கட்டளையை உடனே துணிந்து நிறைவேற்றத் துணிந்தார்.
"குருவின் திருவடிகளே துணை!'' என்றபடி கங்கை ஆற்றில் நடக்கத் தொடங்கினார். என்ன வியப்பு! அவர் தண்ணீரில் மூழ்கவில்லை. தரையில் நடப்பது போன்றே தண்ணீரின் மேல் நடந்தார். அக்கரை சென்று திரும்பிய அவர் ஆதிசங்கரரைப் பணிவாக வணங்கினார். இந்த அதிசயத்தைப் பார்த்து எல்லா சீடர்களும் வியப்பு அடைந்தனர்.
சனந்தனரைப் பார்த்து ஆதிசங்கரர், ""உன்னை ஆற்றில் நடந்து செல் என்றேன். அது உன்னால் இயலுமா என்று நீ சிறிதும் சிந்திக்கவில்லை. உன்னால் எப்படி தண்ணீரின் மேல் நடக்க முடிந்தது?'' என்று கேட்டார்.
""குருவே! தங்கள் அருள் இருந்தால் எதுதான் இயலாது? குருவின் திருவடிகளே துணை என்று தங்களை வேண்டியபடியே சென்றேன். இயலுமா, இயலாதா என்பதைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை!'' என்று பணிவுடன் சொன்னார்.
"சனந்தனா! கங்கை ஆற்றைப் பார்!'' என்றார் அவர். எல்லாரும் ஆற்றைப் பார்த்தனர். அங்கே சனந்தனர் கால் வைத்த இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் தோன்றி இருந்தன. அவைதான் அவர் தண்ணீரில் மூழ்காமல் தாங்கின என்பது அவர்களுக்குப் புரிந்தது.
"சனந்தனா! குரு பக்தியின் பெருமையை நீ உலகுக்கு உணர்த்தி விட்டாய். நீ கால் வைத்த இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் தோன்றின. அதனால், இன்று முதல் நீ பத்மபாதன் என்று பெயர் பெருவாய்!'' என்று வாழ்த்தினார்