Post by Sumi on Dec 17, 2012 12:55:16 GMT 5.5
ஸ்ரீ பரமாச்சாரியார் திருப்பள்ளி எழுச்சி
Source: Maha Periyavaal Darisana Anubhavangal - Part 5
Author: K. Chandrasekaran, Musiri
Special thanks to Forum Member Shri Sankara Narayanan for his assistance in typing the text from the physical copy of the book
1. பொழுது புலர்ந்தது புள்ளினம் பாடிற்று
தொழுது நின்றனர் தேவரும் முனிவரும் !
விழுக வில்லையோ ஓசைகள் நும்செவியில்
எழுக எழுகவே, யதியே எழுகவே !
2. மக்களை உய்விக்க மகானாய் வந்த
மகாலக்ஷ்மி வயிற்றுதித்த மகவே எழுகவே !
விழுப்புரம் தந்த ஒப்பரும் வள்ளலே
பொழுது புலர்ந்தது புனலாட எழுகவே !
3. பிறவிச் சுழலில் பரிதவிப் பவரைத்
துறவிக் கோலத் தாட்கொண்ட தெப்பமே !
சுப்பிர மணியரின் சுதனே தவமே
அப்பிய காரிருள் அகன்ற தெழுகவே !
4. ஜகத்குரு பிறப்பால் ஜயவருடம் சிறந்தது
உகந்தநாள் ஆனது வைகாசி அனுஷம் !
ஞானகுரு தோன்றிய ஞாயிறும் பொலிந்தது
தீனரைக் காத்திடத் துயில்களைந் தெழுகவே!
5. பிஞ்சுப் பருவத்தில் பதின்மூன்று வயதில்
காஞ்சியை யடுத்த கலவையில் துறவேற்ற
சாமி நாதரே, சந்திர சேகரராய்
பூமியில் அருளட்சி புரிந்தவரே எழுகவே !
6. கரும்பு வில்லேந்தி, கண்களில் கருணை
அரும்பும் காமாட்சி அரசாளும் காஞ்சியில்
அறுபத் தெட்டாம் ஆச்சார்ய ஸ்வாமிகளாய்
பொறுப்பேற் றவரே பள்ளி எழுகவே !
7. சித்தன்ன வாசலில் சிவலிங்க உருவங்கள்
எத்தனையோ காலமாய் எவருக்கும் தெரியாமல்
நீரடியில் கிடக்க, நீரை இறைப்பித்து
பாரறியச் செய்தவரே பள்ளி எழுகவே !
8. வற்றிய மேனியில் வற்றா அருட்பெருக்காய்,
முற்றிய ஞானத்தில் மேருவாய், தன்னைப்
பற்றிய பக்தர்க்குப் பார்த்த மாத்திரத்தில்
வெற்றி யளித்திடும் விமலரே எழுகவே !
9. கண்ணில் கருணையும் கையில் தண்டுமாய்
மண்ணில் நடகாடி மாதவம் மேற்கொண்டு
நுண்ணிய அருளுரைகள் நாளும் வழங்கிப்
புண்ணியம் பெருக்கிய பெரியவரே எழுகவே !
10. வீட்டுப் பற்றை வேரோ டறுத்தும்
நாட்டுப் பற்றால் நாளும் கதருடுத்தி
ஒருபிடி அவலை உணவாய் அருந்தி
ஒருநூ றாண்டுகள் வாழ்ந்தவரே எழுகவே !
11. இரகுராமன் திருப்பெயரை எழுதுவோர் தம்மை
வெகுமாக ஊக்குவித்தீர் வெள்ளிக்கா சளித்து!
தகுதியுடைப் புலவர்க்குத் தங்கமும் பணமுடிப்பும்
மிகுதியாய் வழங்கிய மழைமுகிலே எழுகவே !
12. கொல்லப் படுகின்ற கோக்களைப் பேணுதற்கு
நல்ல கொட்டில்கள் நாடெங்கும் அமைத்தவரே
தளர்ந்த வயதிலும் திருவடியால் மண்ணை
அளந்த அருட்சுடரே அதிகாலை எழுகவே !
13. போட்டிகள் நடத்திப் பாவைப் பாடல்களை
நாட்டில் பரப்பினீர் நற்றமிழ் வளரவே !
பட்டாடை நெய்யப் புழுக்களைக் கொல்வதால்
கட்டாதீர் என்றவரே கருணைகூர்ந் தெழுகவே !
14. வரதட் சிணையை வாங்குவோர் அழைப்பிதழில்
குருவரு ளாலெனக் குறிப்பிடா தீரென்று
மறுப்பு வெளியிட்டு மகளிர் நலனில்
பொறுப்புடன் செயற்பட்ட பெருந்தகையே எழுகவே!
15. நலிந்த மாந்தர்கள் நலம்பெற வேண்டி
மெலிந்த மேனியை மேன்மேலும் வருத்தி,
கனகாபி ஷேகங்கள் குவலயத்தார் செய்தாலும்
தனக்கேதும் கொள்ளாதத் தூயவரே எழுகவே !
16. வேத தர்மபரி பாலன சபையும்
வேத ரக்ஷண நிதியும் ஏற்படுத்தி
ஆகம சில்பசதஸ் ஆங்காங்கு நடத்தி
யாகங்கள் வளர்த்த யோகியே எழுகவே !
17. விடிவெள்ளி எழுந்தது வேதம் முழுங்குது,
அடியவர் குழுமினர் அருளுரை கேட்க !
செடிகள் பூத்தன சிரசில் நீர்சூட
படித்துறையில் நீராடப் பகலவன்போல் எழுகவே !
18. எவரைத் தொழுதேத்தி யானே ப்ரம்மமென்றும்
புவனங்க ளீரேழும் பொய்யான தோற்றமென்றும்
சிவனே யானென்றும் சிந்தை தெளிந்தேனோ
அவரைத் துயிலெழுப்ப ஆதவனும் எழுந்தானே !
19. பால சூரியன்போல் பதின்மூன்று வயதில்
ஞாலம் உயர்வுற ஞானப் பயிர்வளர்த்தீர்
காலம் ஒருமூன்றும் கடந்து நிற்பவரே
தூல உருமீண்டும் துலங்குமா றெழுகவே !
20. விஞ்ஞான வசதிகள் வாகனங்கள் யாவும்
நஞ்சாக நினைத்து நடந்தே பயணித்து
அஞ்ஞான விருளில் அல்லற் படுவோர்க்கு
மெய்ஞான வொளியாக மிளிர்ந்தவரே எழுகவே !
21. வரவேண்டும் குருவே வையகம் தழைத்திட
தரவேண்டும் நல்லுரைகள் தெய்வத்தின் குரலாக
தொழவேண்டும் நாங்கள் தங்கள் திருவடியை
எழவேண்டும் தாங்கள் இவ்வேழைக் கருளவே !
22. குருவருட் கவியாம் சந்திர சேகரன்
கருணைக் கடலாம் காஞ்சிப் பெரியவரைத்
திருப்பள்ளி எழுச்சியால் துதித்தேன் இதைப்படித்தோர்
விருப்பங்கள் கூடுமே, வருத்தங்கள் தீருமே !