Post by kramans on Jan 17, 2012 9:27:41 GMT 5.5
சாதாரண மக்களுக்கான அவ்வளவு கடினமில்லாத தவம் பிருஹதாரண்யக உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் அது நாம் தவம் செய்வது போன்று விரதம் இருப்பது, வலியைத் தாங்கிக் கொள்வது, குளிர் காய்ச்சல் போன்றவைகளை பொறுமையுடன் அனுபவிப்பது முதலியவற்றுக்கு கடவுள் அளித்த ஓர் வாய்ப்பு என்று எண்ணி உடல் உபாதையை வரவேற்க வேண்டும். நோய்வாய்ப்பட்டால் அது நாம் நம்முடைய தேவைகளை மறந்து கடவுளை நினைக்க வாய்ப்பு என்று எண்ண வேண்டும். அவ்வாறு நினைத்தால், நம்முடைய கடமைகளை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் செய்ய நாம் அறிந்து கொள்வோம்.
துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும்போது தீய எண்ணங்கள் நம் மனதில் புகாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும். அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும். ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்பணித்துவிட்டால் சக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மனநிலையை நாம் பெறலாம்.
--------------------------------------------------------------------
நமக்கு சம்பந்தப்பட்டவைகளையும் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், நாம் மகிழ்ச்சியாலோ, துக்கத்தினாலோ பாதிக்கப்படாமல் மனதில் சம நிலையை அடைய முடியும்.
ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையப் பொறுத்ததல்ல. இந்து மத கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசாரகனாகிறான்.
அப்படிப் பட்டவர்களால்தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது.
இந்து மதத்தில் தோன்றிய மஹான் கள் தங்களுடைய உபதேசங்களால் மக்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதாகவோ அல்லது அவர்களை உய்விப்பதாகவோ சொல்லிக் கொள்ளவில்லை.
அவர்களுடைய பரிசுத்தமும், கொள்கைகளும் அதன்படி அவர்கள் நடத்திய வாழ்க்கையும் அவரைஅண்டியவர்களுக்கு ஆன்மீகக் கல்வியாக அமைந்தது. தான் பரிசுத்தமாக இல்லாத ஒருவர் ம்ற்றவர்கள் அவ்வாறு இருக்க வேண்டுமென்று உபதேசம் செய்ய முடியாது.
வேதங்கள் நம்முடைய மதத்தின் வேர்கள். பண்டிகைகளும், விருந்துகளும், மற்றவைகளும் அம்மரத்தின் பூக்களும், கனிகளும் போல, அவைகளுக்கும் வேதம் என்ற வேர் தேவைப்படுகிறது. மண்ணில் புதைத்திருந்தாலும் அந்த வேர்கள் மரத்தின் பூக்களையும் கனிகளையும் போல மணத்துடனும் எப்போதும்
புதுமையாகவும் இருக்கின்றன. வேத அத்யயனமும் வெதத்தை தினசரி சாஸ்திர சடங்குகளில் உபயோகப் படுத்துவதும் நமக்கு மிக முக்கியம். இதற்கு வேதங்களை மனப்பாடம் விதிப்படி ஓதவேண்டும்.
கல்யாணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் தெரியாததால் இளைஞர்களும், பெண்களும் அது பற்றி அசட்டையாக இருக்கின்றனர். மந்திரங்களின் அர்த்தங்களை விஷயம் தெரிந்த ஒருவர் கல்யாணத்திற்கு முன்பே விளக்கிச் சொல்லிவிட்டால், மணமக்கள் புரிந்து கொண்டு அக்கறையுடன் சடங்குகளைச் செய்வார்கள். இதே முறையை உபநயனம் மற்றும் இதர ஸம்ஸ்காரங்களுக்கும் கையாளலாம்.
ஒரு நாள் ஒரு பாலத்தின் ஒரு வளைவின் கீழ் நின்று மற்ற வளைவுகளைப் பார்த்தால் அவை தான் நின்று கொண்டிருக்குமிடத்திலுள்ள வளைவைவிட சிறிய வைகளாக தெரியும். ஆனால் பாலத்தின் எல்லா வளைவுகளும் ஒரே அளவானவை என்று நமக்குத் தெரியும்.
அதுபோல் ஒரு தேவதையிடம் பக்தி கொண்ட ஒருவனுக்கு மற்ற தேவதைகள் கீழானவைபோல் தோன்றும். வினாடியும் தன்னுடைய தேவதையிடம் தான் கொண்ட அபிமானத்தால் அவ்வுணர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் எல்லா தெய்வங்களுமே கடவுளின் விதவிதமான தோற்றங்களே.