Post by varagooran on May 13, 2020 14:29:26 GMT 5.5
"பிரதமை திதியை உயர்த்திய பரமாசார்யா'
(பிறந்ததும் பிரதமை,சந்நியாசம் பூண்டதும் பிரதமை)
(நேற்று பெரியவா பிறந்த நாள்,கன்னட பஞ்சாங்க பிரகாரம்-08-05-2020-வைகாச அனுஷம் + கிருஷ்ண பக்ஷ பிரதமை)
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவா பிறந்தது-ஜய வருடம், வைகாசி மாதம்,8ம் தேதி, அதாவது,1894.ம் வருடம் மே 20ம் தேதி. அனுஷ நட்ச்சத்திரத்தில்,பிரதமை திதியில் பிறந்தார்.(இக்கட்டுரை போடும் காரணமே, நேற்று(கன்னட பஞ்சாங்க பிரகாரம், பிரதமை திதி) கிருஷ்ண பக்ஷம் 08-05-2020. மற்றொன்று சுக்கில பக்ஷ பிரதமையில் சந்நியாசம் பூண்டார்.-ஆகையால் இக்கட்டுரை பிரதமையைப் பற்றியது)
அனுராத நட்சத்திரம் -27 நட்சத்திரங்களில் அதிர்ஷ்டம் இதற்குத்தான் அடித்தது. ஏனெனில் வேதத்திலேயே அனுராதாவை, உயர்த்தி வைத்திருக்கிறது. எந்தக் காரியத்துக்கும் வேத வித்துகளிடமிருந்து உத்தரவு வாங்கிக்கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம். அதனை அனுக்ஞை என்பர்.இதற்கு உள்ள மந்திரத்தில் அனுராதாவுக்கு ஆஹூதி அளித்து (வேள்வி செய்து), மித்ரனின் (நண்பன்) அருளால், நூறாண்டுகள் இருக்க வேண்டுமென்று வேண்டப்படுகிறது.
வேத, வேள்வி தழைக்கப் பிறந்தவரின் திருநட்சத்திரத்தின் சிறப்பும் எப்படி இருக்கிறது பாருங்கள்!
பெரியவா பிறந்த திதி பிரதமை. பதினைந்து திதிகளில் அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்யமாட்டோம். இந்த மூன்று திதிகளும், இதற்காக இறைவனிடம் சென்று அழுதனவாம். "நீதான் எல்லா திதிகளிலும், என்று மந்திரம் இருந்தாலும், எங்களை எல்லோரும் தள்ளிவிடுகிறார்களே! நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்று கேட்டனவாம்.
உடனே, ஸ்வாமி, "அப்படியா! கவலையை விடுங்கள்...மற்ற திதிகளைவிட உங்கள் மூவரையும் சிறப்பாகக் கொண்டாடும்படி நான் செய்து விடுகிறேன்!" என்று ஆறுதல் தந்தார்..
அதன்படி நவமியில் ராமனாகவும், அஷ்டமியில் கிருஷ்ணனாகவும்,பிரதமையில் பரமாசார்யாளாகவும் அவதாரம் பண்ணி, அந்த நாட்களை, வீட்டுக்கு வீடு குதுகலாகமாகக் கொண்டாட வைத்தார். அதிலும் இந்த பிரதமைக்கு 'போனஸ்' என்னவென்றால், மாதத்தில் இரண்டு அஷ்டமி,இரண்டு நவமி,இரண்டு பிரதமை வருகிறது. அஷ்டமியில் ஒன்றை மட்டும் உயர்த்தினார். ஒன்றை விட்டுவிட்டார். நவமியிலும் அவ்வாறே செய்தார்.
ஆனால், பிரதமையில் இரண்டையுமே பெருமைப்படுத்தியிருக்கிறார்.கிருஷ்ணபட்சப் பிரதமையில் பெரியவா பிறந்தார். சுக்கிலபட்சப் பிரதமையில் மறுபிறவி எடுத்தார். அதாவது சந்நியாசம் பூண்டார். ஆகவே இரண்டு பிரதமைகளும் கொண்டாடப்படுகின்றன.
ஒருவேளை பிரதமையை அதிகமாக அழ விட்டுவிட்டோமோ என்று பச்சாதாபப்பட்டு, இப்படி செய்தார் போலும்! (கிருஷ்ணாவதாரத்துக்கு பின் பெரியவா திரு அவதாரம் செய்தபோது யுகங்கள் கடந்து விட்டதல்லவா?)