Post by varagooran on Mar 15, 2020 17:08:39 GMT 5.5
சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம
(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு என்ன இருக்கிறது?--பெரியவா).
தொடர்ந்து நான்கு சஹஸ்ரநாம பூஜை குங்குமத்தால் செய்த பெரியவாளின், வலக்கை விரல் வீங்கினாற் போல காணப்பட்டுதும், தொண்டர் மலரினால் அர்ச்சனை செய்ய வேண்டிக் கொண்டதற்கும், -பெரியவாளின் பதில் மேலே)
(பெரியவாளின் பூஜையும்-இசை ஞானமும்)
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
குடந்தைக்கு அருகில் கல்லூர் என்ற கிராமம். 1939-ஆம் ஆண்டு நவராத்திரி பூஜைகள் முடிந்தபிறகு இந்தக் கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள் ஸ்ரீசுவாமிகள். அருணோதயத்தில் தொடங்கிய பூஜை மதியம் ஒரு மணியளவில்தான் நிறைவுற்றது.மாலையில்
அந்த ஊர்க் கோயிலுக்குச் சென்றார்கள்.
.
ஸ்ரீசுவாமிகளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தார்.சுவாமிகளின் வலக்கை ஆள்காட்டி விரலும்,கட்டை விரலும் சிறிது வீங்கினாற்போல் சிவந்திருப்பதை அந்த அன்பர் கண்டார்.சுவாமிகளிடம் எப்படிக் கேட்பது என்று புரியாமல் தொடர்ந்தார்.
தம் வலக்கை விரல்களையே கவனித்துச் செல்லும் தொண்டரை, "என்ன அப்படிப் பார்க்கிறாய்?" என்று ஸ்வாமிகள் வினவினார்கள்.
"மன்னிக்க வேண்டும், தங்கள் கை விரல்கள் சற்று வீங்கினாற் போல் காண்கிறது.காலையில் நான்கு சகஸ்ரநாமங்கள் குங்கும அர்ச்சனை செய்ததால் இருக்கலாம். கொஞ்சம் தேங்காயெண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். மேலும் மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது" என்றார் தொண்டர்.
"அப்படியா?" என்று தம் கையைப் பார்த்து முறுவல் பூத்த ஸ்ரீசுவாமிகள் உடனே மெல்லிய தொனியில் கரகரகப்ரியா ராகத்தில், 'சேதுலார ஸ்ருங்காரமு.. ஜேஸி ஜூதனு ஸ்ரீராம..' என்ற கீர்த்தனையைப் பாடிக்கொண்டே வந்தார்கள்.
பாடல் முடிந்ததும், "இது யார் செய்த கீர்த்தனை தெரியுமா?" என்று கேட்டார்கள்.
"தெரியவில்லை" என்று தலையாட்டினார் தொண்டர்.
"தியாகராஜ சுவாமிகள் பாடியது. 'ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன' என்பது
கீர்த்தனையின் பொருள்.
அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதைவிட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு என்ன இருக்கிறது? இரண்டு விரல்களாலும் அழுத்தமாக எடுத்து ஜகன்மாதாவின் திருவடியில் அர்ச்சித்தால்தான் பலன் உண்டு. அப்படி இல்லாமல் பாதி தரையிலும் பாதி அம்பாள் பாதத்திலும் விழுமாறா அர்ச்சனை செய்வது?"