Post by hemalathak on Jul 18, 2012 18:19:27 GMT 5.5
DEIVATHIN KURAL VOLUME I
Aanantham Enge - Part 1
Aanantham Enge - Part 1
SHRI MAHA PERIAVA THIRUVADIGAL CHARANAM
காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை
கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை
விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை
நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை.
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
அத்வைதம்
ஆனந்தம் எங்கே
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசாப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விச்ஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா. யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம் நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம் சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாக குஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம்
குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்த மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
இன்னோர் உதாரணம் சொல்கிறேன். என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவற்றுக்கு சித்தப்பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாக வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு நேர்மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு மூத்தாள் பிள்ளையோடு ஒத்துவரவில்லை. ஏகச் சண்டை போட்டு குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து மூத்தாள் பிள்ளை இளையாளுக்குப் பில்லி சூன்யம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப்பிரமை ஏற்படும்போது கலலைப்படுகிறார்களென்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவனுக்கு அவனிடம் நம்முடையவன் என்ற சம்பந்தம் போய் விட்டது. இளையாளிடம் மட்டும் நம்முடையவன் என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு ஹானி இல்லை என்றால் இவர் ஆனந்தப்படுகிறார்