Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 24, 2019 8:55:31 GMT 5.5
தூய்மையான மாணிக்கக் கற்களால் இழைக்கப்பட்ட மாளிகை. சுற்றிலும் விளக்குகள் எரிகின்றன. மணம் வீசும் புகை கமழ்கிறது. அங்குள்ள படுக்கையில் கண்ணுறங்கிக் கொண்டிருக்கின்ற மாமன் மகளே! மணிகள் கட்டப்பட்ட கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாயாக. அத்தையே! உறங்கிக் கொண்டிருக்கின்ற உமது மகளை எழுப்ப மாட்டீர்களா? உமது மகள் ஊமையோ அல்லது செவிடோ? நீண்ட தூக்கம் கொள்கின்றாளோ? 'அளவற்ற மாயச் செயல்கள் செய்த மாதவனே! வைகுண்டத்தில் வாழ்பவனே!' என்று பலமுறை சொல்லிப் பாடுகிறோம். அத்தையே! அவளை எழுப்புங்கள்.
|
|
|
Post by radha on Dec 25, 2019 6:43:08 GMT 5.5
THIRUPAVAI-10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 25, 2019 16:50:55 GMT 5.5
பாவை நோன்பு நோற்றுச் சுவர்க்கம் செல்ல நினைக்கின்ற பெண்ணே! வாசலைத் திறவாதவர் பதிலாவது சொல்லக் கூடாதா? மணம் வீசும் துளசி மாலையை (துழாய் மாலை) தனது தலையிலே சூடியுள்ள நாராயணன் நாம் போற்றித் துதித்தால் அருள் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறான். முன்பொருநாள் புண்ணியவானாகிய இராமபிரானால் தோல்வி அடைந்தான் கும்பகர்ணன், அவனுக்குப் பிறகு அவனுக்கே உரிய பெருந் தூக்கத்தை உனக்கே கொடுத்து விட்டானோ? நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட பெண்ணே! கிடைத்தற்கு அருமையான அணிகலன் போன்றவளே! உறக்கம் நீங்கிக் கதவைத் திறப்பாயாக.
|
|
|
Post by radha on Dec 26, 2019 6:34:15 GMT 5.5
THIRUPAVAI -11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட, சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 26, 2019 7:09:40 GMT 5.5
ஆயர்க்குலத்தினர் கன்றுகளையுடைய பசுக்களிடமிருந்து பால் கறப்பார்கள். குற்றமற்ற தொழில் அவர்களுடையது இருப்பினும் வலிய வரும் பகைவர்களை போர் மேல் சென்று அவர்களின் வீரம் அழியும்படிச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களின் குடும்பத்தில் பிறந்தவளே! பொன்னால் செய்யப்பட்ட கொடி போன்ற பெண்ணே! புற்றில் வாழும் பாம்பின் படம் போன்ற அல்குலையும், காட்டில் வாழும் மயில் போன்ற சாயலையும் உடையவளே! செல்வக் குடியில் பிறந்த பெண்ணே! எழுந்து வருவாயாக.நாங்கள் சுற்றம் சூழ வந்து உனது வீட்டின் முற்றத்தில் புகுந்து கரிய மேகத்தின் நிறமுடைய கண்ணனின் பெயர் சொல்லிப் பாடுகிறோம். நீ சிறிதேனும் எங்களுடன் பேசாமல் உறங்குவதர்க்குப் பொருள் என்ன?
|
|
|
Post by radha on Dec 27, 2019 6:22:46 GMT 5.5
Hari Om THIRUPAVAI-12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்? அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 27, 2019 9:37:01 GMT 5.5
இளங்கன்றையுடைய எருமை தனது கன்றை அழைக்கும். கன்றுக்காக இரக்கப்பட்டுத் தனது மார்பின் வழியாகப் பால் சொரியும். அந்தப் பால் இடையர்களின் இல்லத்தை நனைத்துச் சேறாக்கும். அப்படிப்பட்ட நல்ல செல்வந்தனின் தங்கையே! மார்கழி மாதத்தின் பனி எங்கள் தலையில் விழ உனது வீட்டு வாசல் கதவைக் கையால் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். தனது கோபத்தால், தெற்குத் திசையிலுள்ள இலங்கைக்குத் தலைவனாகிய இராவணனைக் கொன்ற இராமனின் புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்கும் போதும் நீ உனது வாயைத் திறக்காமல் இருக்கிறாய். இனிமேலாவது எழுந்திரு. இது என்ன பெரிய உறக்கம்? நாங்கள் உனது வீட்டின் முன் நின்று உன்னை அழைப்பது எல்லா வீட்டுக்காரர்களுக்கும் தெரிந்து விட்டது.
|
|
|
Post by radha on Dec 28, 2019 6:14:52 GMT 5.5
THIRUPAVAI-13
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 28, 2019 6:51:24 GMT 5.5
இராமனாகப் பிறவி எடுத்த போது இலங்கை மன்னன் இராவணன் என்னும் அரக்கனின் தலையைக் கிள்ளி எறிந்தான். கண்ணனாகப் பிறவி எடுத்த போது தன்னைக் கொல்ல, ஒரு பறவை வடிவம் தாங்கி வந்த பகாசுரன் என்னும் அரக்கனின் வாயைக் கிழித்தான். இப்படிப்பட்ட புகழை எல்லாம் பாடி எல்லாப் பெண்களும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்குச் சென்று விட்டார்கள். வியாழன் என்னும் கோள் மறைந்து (அஸ்தமித்து) விட்டது. வெள்ளி என்னும் கோள் உதயமாகி விட்டதை அறிவித்து புள்ளினங்களும் கூவுகின்றன. மலரைப் போன்ற கண்களையுடையவளே! உனது கள்ளத்தனத்தை விட்டு விடு. இந்த நல்ல நாளில் எங்களுடன் சேர்ந்து உடலும் உள்ளமும் குளிரும்படி நீரில் மூழ்கி நீராடாமல் படுக்கையில் கிடக்கிறாயோ?
|
|
|
Post by radha on Dec 29, 2019 6:06:50 GMT 5.5
THIRUPAVAI -14
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 29, 2019 7:00:17 GMT 5.5
பெண்ணே உங்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்தில் இருக்கும் குளத்தில் செங்கழுநீர் (செவ்வாம்பல்) மலர்கள் இதழ்களை விரித்து மலர்ந்தன. ஆம்பல் மலர்கள் (அல்லி மலர்கள்) கூம்பிட்டன. போய்ப்பார். காவி நிறத்தில் தோய்த்துச் சாயம் ஏற்ப்பட்ட ஆடைகளை அணிந்து, வெண்மையான பற்களையுடைய முனிவர்கள் தங்கள் இருபிடத்திற்க்குச் சென்று சங்குகளை முழக்கிப் பொழுது விடிந்தது என்பதை அறிவிக்கப் புறப்பட்டு விட்டார்கள். "உங்களை நாளைக்கு நான் முன்னாள் வந்து எழுப்புவேன்" என்று நேற்று நீ உனது வாயால் கூறினாயே. இப்போது நாங்கள் உன்னை வந்து எழுப்புகிறோம். வெட்கம் கெட்டது உனது நாக்கு. எழுந்திரு. சங்கும் சக்கரமும் ஏந்துகின்ற அகன்ற கைகளையும், தாமரை மலர் போன்ற கண்களையும் உடையவன் கண்ணன். தூக்கத்தில் இருந்து எழுந்து அவனைப் பாடு.
|
|
|
Post by radha on Dec 30, 2019 6:11:53 GMT 5.5
HARI OM THIRUPAVAI-15
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; 'வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!' 'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!' 'ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?' 'எல்லோரும் போந்தாரோ?' 'போந்தார், போந்து எண்ணிக்கொள்' வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 30, 2019 6:31:19 GMT 5.5
துயில் எழுப்ப வந்த பெண்கள் : ஏனடீ, இளமையான கிளி போன்ற பெண்ணே! இன்னுமா உறங்குகிறாய்?
துயில் நீங்கி எழாத பெண் : பெண்களே! சில்லென்று கடுமையான சொற்களைக் கூறி எழுப்பாதீர்கள். இதோ புறப்பட்டுவிட்டேன்.
துயில் எழுப்ப வந்த பெண்கள் : வாய்ப்பேச்சில் வலிமையுடையவள் நீ. நீ உண்மையே பேசுவாய் என்பதை நாங்கள் முன்பே அறிவோம்.
துயில் நீங்கி எழாத பெண் : நீங்கள்தான் வாய்ப்பேச்சில் வலிமையுடையவர்கள், நீங்கள் கூறுவதுபோல நான் தான் பேச்சில் வலிமையுடையவள் என்றாலும் அப்படியே ஆகிவிட்டுப் போகிறேன்.
துயில் எழுப்ப வந்த பெண்கள் : எங்களிடம் உனக்கு என்ன மனவேறுபாடு? சீக்கிரம் வா.
துயில் நீங்கி எழாத பெண் : எல்லோரும் வந்து விட்டீர்களா?
துயில் எழுப்ப வந்த பெண்கள் : வந்தவர்களை நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள். வலிமையான 'குவலயாபீடம்' என்னும் யானையைக் கொன்றவன் கண்ணன். தீயவர்களை அழிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன் அவன். மாயச் செயல்கள் செய்பவன். அவனை நினைதுப்பாடிப் பாவை நோன்பு நோற்க விரைந்து வருவாயாக.
|
|
|
Post by radha on Dec 31, 2019 5:34:14 GMT 5.5
HARI OM !
நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். THIRUPAVAI-16
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Dec 31, 2019 7:04:35 GMT 5.5
ஆயர்குடி மக்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கக்கூடியவன் நந்தகோபன். அவனது வீட்டிற்குக் காவலிருப்பவனே! கொடிகள் கட்டப்பட்ட தோரண வாயிலைத் காப்பவனே! மணிகளோடு கூடிய கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாயாக. மாயச் செயல்களைச் செய்யும் மணிவண்ணன் (கரிய நிறம் உடையவன்) எங்களை இன்று சந்தித்து ஆட்கொள்வதாக நேற்று கூறினான். அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பும் பொருட்டுத் திருப்பள்ளி எழுச்சியை நாங்கள் பாட வேண்டும். அதற்காக உடலும் உள்ளமும் தூய்மையாக வந்துள்ளோம். வாயில் காப்பவனே! முதல் முதலில் உனது வாயால் 'முடியாது' என்று மறுப்புச் சொல்லிவிடாதே. கண்ணன் வீட்டுக் கதவைத் திறப்பாயாக.
|
|