Post by hemalathak on Jun 23, 2012 16:50:22 GMT 5.5
ஆனால் வாஸ்தவத்தில் நான் ஈசுவர பக்தி என்று சொல்வது நம் கஷ்ட நிவிருத்திக்காகப் பிரார்த்திப்பதை அல்ல. அல்லது நமக்கு சந்தோஷ வாழ்வைத் தந்தவனுக்கு நன்றியாகப் பக்தி செலுத்த வேண்டும் என்றும் சொல்லவில்லை. நான் அப்படிச் சொன்னால், "மரம் வைத்தவன் ஜலம் ஊற்றத்தான் வேண்டும். அது அவன் கடமை. இதற்கு என்ன நன்றி?" என்று யாராவது ஆட்சேபிக்கலாம்.
ஆகவே இதற்கெல்லாம் நான் பக்தியைச் சொல்லவில்லை. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், இப்போது கஷ்டம், சந்தோஷம் என்ற இரண்டு வார்த்தைகளைச் சொன்னேனே, இந்த இரண்டுமே மனஸை ஆட்டுபவைதான். மனம் ஆடாமல் இருப்பதுதான் உண்மை ஆனந்தம். மற்ற சந்தோஷங்கள் எதுவும் நிரந்தரமானவை அல்ல. தூங்கும்போதும் ஜடமாகப் பிரமை பிடித்திருந்தாலும் கஷ்டம் - சுகம் இல்லைதான். ஆனால் அப்போது ஆனந்தமா, சாந்தமாக இருக்கிறோம் என்றுமூ தெரிவதில்லை. மனஸில் அலை எழாமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அமைதியாக இருக்கிறோம் என்ற பூரண ஞானத்துடன் அப்படி இருக்க வண்டும். அந்த நிலை வந்துவிட்டால் நமக்கு ஈடு இனை இல்லை. மனசு என்று ஒன்று இருந்து அதிலே எண்ணங்கள் தோன்றுகிறபடியால்தான் "பரமாத்மாவுக்கு வேறாக ஜீவாத்மா என்ற நாம் இருக்கிறோம்" என்ற எண்ணமே உண்டாக முடிகிறது. மனசு நின்று போய்விட்டால் இந்த பேதபுத்தி போய்விடும். பரமாத்மாவுக்கு வேறில்லாத அத்வைதம் என்கிற பெரி..ய்ய, நிறைந்த நிலையில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்து விடுவோம். சாந்தி, அமைதி வேண்டும என்றே நாம் மனசை நிறுத்தினாலும், அதன் பலன் அகண்டாகாரமான அத்வைத அநுபவமே ஆகிறது. அநத் நிலை வருவதற்கு அந்நிலையில் உள்ள ஒன்றைத் தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்த நினைவு நம்மை அதுபோலவே உருவாக்கிவிடுகிறது. இதை விஞ்ஞான ரீதியில் அமைதிக்கு, ஆனந்தத்துக்கு ஒரு லட்சிய உதாரணமாக (ideal) இருப்பது ஸ்வாமிதான்.
பிரபஞ்சத்தை நடத்தி இத்தனை காரியங்களை செய்தும், கவனித்தும் பலனளித்தும் வந்தாலும் ஸ்வாமி இதனால் எல்லாம் மனம் சலிக்காமல் சாந்தமாக இருக்கிறார். ஈச்வரனை ஸ்தாணு என்பார்கள். கட்டை மரம், பட்ட கட்டை என்று அர்த்தம். உயிரோட்டம் உள்ள மரம்தான். ஆனாலும் உணர்வில்லாத மாதிரி இருக்கிறது. இந்தக் கட்டையை சுற்றிக் கொண்டிருக்கும் கொடி, அம்பாள். அந்தக் கொடிக்கு அபர்ணா என்று ஒரு பெயர். அதாவது, இலை இல்லாதது என்று அர்த்தம். உயிரோட்டத்துடன், ஆனால் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாத
பராசக்தி என்ற கொடியானது உயிரோட்டம் இருந்தாலும் உணர்ச்சி இல்லாதது போலிருக்கும் பரம்பொருளைக் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஸ்வாமீ என்று நினைக்கும்போதே ஞானம் சாந்தம் என்ற இரண்டு பாவமும் நம் மனசிலும் வருகின்றன. எனவே, ஸ்வாமியைத் தியானம் செய்யச் செய்ய இந்த ஞானம், சாந்தம் இந்த இரண்டும் நமக்கு நன்றாக ஸித்திக்கின்றன. இதற்கே ஸ்வாமி வேண்டும். அவரது ஸ்மரணையான பக்தி வேண்டும் என்கிறேன்.
நாம் கஷ்ட நிவிருத்திக்காக ஸ்வாமியிடம் போனாலும் சரி, அல்லது சௌக்கியமாக இருக்கிறோம் என்று நன்றி காட்டப்போனாலும் சரி, அவரை நினைக்கிற பழக்கம் வலுக்க தானாகவே இந்தக் கஷ்டம் - சௌக்கியம் ஆகியவற்றைப் பற்றியே நினைப்பதிலிருந்து நம் மனம் விடுபடும். அவர் எப்படி நடத்துகிறாரோ அப்படி நடத்திவைக்கட்டும் என்று பாரத்தை அவரிடமே தள்ளிவிட்டு விச்ராந்தியாக இருக்கிற மனோபாவம் உண்டாகும். ஏதோ ஒர் ஆனந்தமும் சாந்தமும் மனசில் படரத் தொடங்கும். இதுவே நம்மை அமர நிளையில் சேர்ப்பது, ஒயாமல் குறையுள்ள நாம் மாறாத நிறைவாக நிறைவதற்கு வழி செய்வது.
ஆத்ம விசாரம், தியானம், யோகம் இதுகளால்தான் நம் மனசைப் பட்ட கட்டை மாதிரி ஆக்கிக் கொண்டு நிறைந்த நிறைவாக இருக்க முடியும் என்பது உண்மை. பின்னே நான் இந்த சாதனைகளைச் சொல்லாமல் பக்தியைச் சொல்கிறேனே என்று கேட்கலாம். ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் ஒரு காரியமும் ஒரு சிந்தனையும் இல்லாமல் - அப்படிப்பட்ட நிலையில் பக்தி என்கிற மனசின் காரியமிகூட இல்லைதான் - இருக்கிற நிலையைத்தான் மோக்ஷம் என்றார். நான் பக்தி பண்ணுங்கள் என்று சொல்கிறேனே எனத் தோன்றலாம். ஆசார்யாள்கூட ஒர் இடத்தில் மோக்ஷத்துக்கான உபாயங்களில் பக்தியே பெரிதானது என்கிறாரே, அது எனக்கு சாதகமா என்று பார்த்தால், அடுத்த வரியிலேயே அவர் பக்தி என்பதற்கு புது மாதிரி லக்ஷணம் ( definition ) கொடுத்து விடுகிறார். அதாவது, தனது ஆத்மாவின் உண்மை நிலை என்ன என்று ஆராய்ந்து அதிலேயே ஆழ்ந்து கிடப்பதுதான் பக்தி என்கிறார். அவர் சொல்கிற இந்தப் பக்தி ஆத்ம விசாரமாக, தியானமாக, யோகமாகத்தான் இருக்கிறதேயழிய , போதுவாக நாம் சொல்கிற அர்த்தத்தில், சற்று முன்னே நான் சொன்ன அர்த்தத்தில், அதாவது நமக்குப் புறம்பாக ஒரு ஸ்வாமி இருப்பதாகவும் அவரிடம் நாம் செலுத்துகிற அன்பே பக்தி என்றும் சொல்கிற அர்த்தத்தில், பக்தியாக இல்லை.