Post by anusham163 on Feb 12, 2015 22:07:11 GMT 5.5
சங்கரர் என்ற சங்கீதம்.
பகுதி 4.
சட்டென்று என் அறிவில் ஒன்று உறைக்க “விக்ஞாபனம் !” என்று குறுக்கிட்டேன். குறுக்கிட்டது என் வழக்கத்திற்கு விரோதம். “விக்ஞாபனம்” என்றும் மரியாதை அறியாத ‘ஸ்வாதீனக்காரன்’ ஸாதாரணமாகச் சொல்லமாட்டேன் என்றே நினைக்கிறேன். அன்று சொன்னது மட்டும் இன்றும் நினைவிருக்கிறது.
பெரியவாள் பக்தரிடம் சற்றுப் பொறுக்குமாறு ஜாடை காட்டினார்.
நான் சொன்னேன், “பெரியவா என்னைப் பத்தி இவ்வளவு சொன்னதுல எனக்கு வாஸ்தவமாகவே பிரயோஜனப்படறது ஆர்ட்கிள் –ல இருந்த சில குறைபாடுகளைப் பெரியவா எடுத்துச் சொன்னதுதான்…”
குறும்புச் சிரிப்பு வெடிக்க, அவர் குறுக்கிட்டு பக்தரிடம் சொன்னார், “பாத்தியா, ஸ்வாதீனக்காரரை ! மரியாதைக்காராளான நீங்கள்ளாம் பெரியவ என்ன சொன்னாலும் ப்ரயோஜனந்தான்னு எடுத்துப்பேள் ! இவர் நான் சொல்றதுலயும் ஏதாவது ப்ரயோஜனப்படுமான்னு தேடித் தேடிப் பார்த்து, கெடச்சா எடுத்துக்கறார்…”
எத்தனை வேண்டுமானாலும் கேலி பண்ணு, கிழவா ! உனக்கில்லாத பாத்தியதையா ? கேலி பண்ணும் உன் ஜாலியே உன் ‘விக்டி’மையும் தொற்றிக்கொள்ளும்படிதான் செய்து விடுகிறாயே !
( மேலே உள்ள இந்த வரியைப் படித்தவுடன், நெஞ்சு பொங்கி கண்ணீர் பெருகியது எனக்கு ! என்ன ஒரு அந்யோன்ய பக்தி இருந்தால் இத்தனை உரிமையுடன் எழுத வரும் ? கண்ணப்ப நாயனார் நினைவுதான் வந்தது !-------anusham163).
“ஸரி சொல்லு, நான் சொல்றதுலகூட ப்ரயோஜனமா, அந்த ஆர்ட்கிள்—ல கொறைபாடுகள் இருக்கிறதாத் தெரிஞ்சிண்டிருக்கே ! அப்பறம் ?”
“இப்பவே பெரியவா அதைப் பாத்து, எங்கெங்கே என்னென்ன கொறைன்னும் சொல்லிட்டா, திருத்திப்பேன். இவருக்கும் திருத்தின ரூபத்திலேயே குடுத்துடலாம்.”
சில க்ஷணங்கள் பெரியவாள் பேசாதிருந்தார். தீர்க்க சிந்தனையாகத் தோன்றியது.
பிரகு, “நான் ஒண்ணும் ஒவ்வொண்ணா சொல்லிண்டிருக்க வேண்டியதில்லை. நீயே மறுபடி, எழுதினதைப் புதுசாப் படிக்கிற மாதிரிப் படிச்சுப்பாரு, ஒனக்கே தெரியும்” என்றார்.
நான் கேள்விக் குறியுடன் அவரைப் பார்த்தேன்.
“தெரியும்” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.
அப்போது அவர் பார்த்த பார்வை அதை அப்படியே என்னுள் அழுத்தியது.
“தெரிவிக்கப்படும்” என்றே அதற்கு அர்த்தம் என்று ஸ்பஷ்டமாகத் ‘தெரிவிக்க’ப்பட்டது !
காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே ?
பக்தரைப் பார்த்தார். “ஒண்ணு மட்டும் சொல்லணும்” என்று கூறி, “ஆர்ட்கிள்ல ஒரு எடத்துல, ‘புத்தி கார்யமே பிராமணாளுக்கு ஸ்வதர்மமா இருக்கறதால அவாளுக்கு மத்தவாளைவிடத் தங்களைப் பத்தி ஒசந்த அபிப்பிராயம், அஹங்காரம்—லாம் உண்டாக எடமிருக்கு; அந்த அஹங்காரத்தை அலம்பறத்துக்காகத்தான் அவாளுக்கு, மத்தவாளுக்கு இல்லாத அத்தனை ஆசார அனுஷ்டானம் வெச்சிருக்கு’ ன்னு இருக்கு. அதுவும் ஒரு காரணந்தான். ஆனா முக்யமான காரணமில்லை. முக்யமான காரணம் என்னன்னா, அவா வேத ரக்ஷணம்னு மந்த்ர ரக்ஷணம் பண்ணவேண்டியிருக்கு. நம்ம கண்ணுக்குத் தெரியாத ஸூக்ஷ்மமான திவ்ய சக்திகளோட (சக்திகளுடைய) அனுக்ரஹத்தை லோகத்துக்குத் திருப்பி விடறத்துக்காகவே மந்த்ரங்கள் ஏற்பட்டிருக்கறது. அந்த மாதிரி ஸூக்ஷுமத்தைக் க்ரஹிக்கணும்னா அதுக்கு இந்த ஆசார அனுஷ்டானங்கள் இருந்தாத்தான் முடியும். மத்த ஜனங்களுக்கு ஸூக்ஷ்ம லோகத்தில கார்யம் இல்லே. ராஜ்ய பாரம் பண்றதோ, சத்ருக்களோட சண்டை போடறதோ, வ்யாபாரம், வ்யவஸாயம், கோ சம்ரக்ஷணம் முதலானதுகள் பண்றதோ, சேவுகம் (சேவகம்) பண்றதோ………இதெல்லாமே நம்மோட இந்த ஸ்தூல லோகத்தோடேயே முடிஞ்சுபோற விஷயம். அதனாலேயே அவாளுக்கு ப்ராமணனுக்கு இருக்கிற அத்தனை ஆசார அனுஷ்டானங்கள் வெக்காதது. ‘அப்படியானா. அவாளுக்கெல்லாம் அவாவா கார்யம் நன்னா நடக்கறதுக்கும் தேவாள் அனுக்ரஹம் வேண்டாமா ?---ன்னா, அவாளுக்கெல்லாமும் அந்த அனுக்ரஹத்தைப் பெத்துக் குடுக்கறத்துக்குத்தான் ப்ராமணனுக்கு யக்ஞாதி கர்மங்களைக் குடுத்திருக்கறது. குடியானவன் தனக்காக மட்டும் பயிர் பண்ணிக்கலை, வியாபாரி தன் ஜாதிக்காராளுக்கு மட்டும்தான் விற்பனை பண்ணலை, ஸேனை தன்னைக் காப்பாத்திக்க மட்டும் யுத்தம் பண்ணலை—ங்கிற மாதிரியேதான் ப்ராமணன் வேத கர்மாக்கள் பண்றதும் தனக்காக, தன் ஜாதியாருக்காக மாத்ரமில்லை. சர்வ ஜன க்ஷேமத்துக்காகவேதான் அவாளுக்கு அதை ட்யூடியாக் குடுத்திருக்கு. அநேக மந்த்ரங்கள்—ல அப்படி ‘எக்ஸ்ப்ளிஸிட்’டாகவே ப்ரார்த்திகறதாவும் இருக்கு.
வர்ண தர்மம்—கிறது division of labour எங்கிற தொழில் பங்கீடுதான்—னு இந்த ஆர்டிகிள்-ல சொல்லியிருக்கற எடத்துல இந்த விஷயம் ஒரு மாதிரி சொல்லியிருக்கு. ஆனா ப்ராமணாளுக்கு மாத்ரம் ஏன் இத்தனை ஆசாரம் அனுஷ்டானம்னு சொல்றபோது அவாளோட தொழிலான மந்த்ர ரக்ஷணத்துக்காகவேதான் இப்டி வெச்சிருக்கு—ங்கிற காரனத்தைச் சொல்லக் காணும். அஹம்பாவத்தைப் போக்கறத்துக்குன்னு மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாகவே சொல்லி, விட்டிருக்கு……”
ஆம், முன்பு அவர் சொன்னபடி ஜாஸ்தி ஆலாபனைதான் ! அதில் ‘சுள்’ கூடவுந்தான் ! இங்கே நவீனப் பார்வையே என்னையும் சற்றுப் பிடித்துக்கொண்டு கைவரிசை காட்டியிருக்கிறது என்று அப்போதே புரிந்து கொண்டேன்.
‘எத்தனை கவனமாகப் படித்து, எத்தனை கூர்மையாக நினைவு வைத்திருக்கிறார் ?’
ஸ்ரீசரணர் கும்மளியாகப் பேசிப் போகிறார் ! ‘இவர் எடிடர், பெறத்தியார் எழுதறதை அடிப்பார், சேப்பார், மாத்துவார், ‘அகத்தும் அந்யதா கர்த்தும்’ எல்லாம் பண்ணுவார். ஆனால் இவர் எழுதறதை யாரும் தொடமாட்டா…”
“அப்டிதானே ?” என்று என்னைக் கேட்டார்.
அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்று விளக்கினேன். அந்த விளக்கம் இங்கு அவசியமில்லை.
கும்மாளிப் பெரியவாள் தொடர்ந்தார், “இப்ப இந்த எடிடர் ஆர்டிகிள்ள எடிடகிட்டயே நான் குத்தம் சொன்னதோட, அடிஷனலாவும் விஷயம் சேத்துட்டேன் [சேத்துட்டேனே ! இப்ப மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வெச்சுப்பாராம் ? என்று ஒரு சிறு பையன் வீறாய்ப்புப் பேசுவதுபோல இருந்தது!]
“ஆனாலும் நான் வாய் வார்த்தையா சொன்னதோட நிறுத்திகறேன். எழுத்தில எனக்கு அந்த கெட்டிக்காரத்தனமெல்லாம் வருமா ? பேசறதுன்னா வள வளன்னு சொல்லிண்டு போயிடுவேன். ரூபம் பண்ணி, ட்ரிம் பண்ணி அளவா எழுதறத்துக்கு (சிரசைத் தட்டிக்காட்டி “போதாது” என்று அழகாக அபிநயித்துக் காட்டுகிறார், உதட்டையும் பெரிதாகப் பிதுக்கி !)
“அதுக்கு இவர் கிட்டயே போய்க்கோ. இவரே ஸரிப்பண்ணித் தரட்டும். (விஷம ஸ்வரூபமாக கண்ணிலும் இதழிலும் நகை, நகை சூட்டி அழகு செய்ய ) ‘நாம எழுதினதுல இந்தக் கெழம் வாயை வைச்சுறதே !’ன்னு இவருக்கு இருந்தாலும் ‘கையையும் வெக்காமநம்ம கையையே ஓட்டறதே !ன்னாவது ஆச்வாசப் படுத்திக்கட்டும்….
என்னைப் பார்த்து, “அப்டி நெனைப்பியோ ? இல்லாட்டா, ‘நாம சொல்லாததை இது சொன்னது போறாதுன்னு அதை நம்மை விட்டே எழுதச் சொல்றதேன்னு கோச்சுப்பியோ?” என்றார்.
“பெரியவ என்னவும் விலையாடலாம்; அல்லது எனக்கே தெரிஞ்சும் தெரியாமலும் உள் மனஸில இருக்கற கோணல் எண்ணங்களைக் கிளறி விட்டு ஸரிப் பண்ணலாம். நான் என் உள்ளத்தரங்கத்திலே நெஜமா என்ன இருக்குன்னு நெனக்கிறேன்னா………(சிரமப்பட்டுச் சொன்னேன்) பெரியவாளே ‘ஆத’ராயிருந்து எழுதற ஆர்டிகிளாத்தான் நான் இருக்கணும்னு ஆசைப் படறதாவே நெனக்கிறேன்…”
சிறிது போது மௌனத்தில் சென்றது. இரு தரப்பிலும் அடியாழ உணர்ச்சி என்னும்போது வேறெப்படி இருக்க முடியும் ?
இன்னும் வரும்……….