Post by anusham163 on Feb 10, 2015 14:07:35 GMT 5.5
சங்கரர் என்ற சங்கீதம்.
பகுதி 2.
என் இயல்பை மீறி நானும் பளிச்சென்று பதில் சொன்னேன் : “ரீஸென்டா ஒரு ஸுவனீரில் ‘சங்கரர் என்ற ஸங்கீதம்’னு ஆர்டிகிள் எழுதியிருக்கேன். பகவத் பாதாள் ---பெரியவா ஒண்ணே ---ன்னு எழுதினது. அவா அநேக லெவெல்ல இருக்கிற மாதிரி இருந்துண்டு, ஸாதாரணமா ஒண்ணு சேராததையெல்லாம் கூட இயற்கையா ஒண்ணு சேத்து பல லெவெல்லே இருக்கறவாளுக்கும் வழி காட்றதே ஸப்த ஸ்வர ஸங்கீதமா, பக்க வாத்யங்களும் சேத்துண்டு பாடற ஸங்கீதமா இருக்குன்னு ஆர்டிகிள்லே சொல்லியிருக்கு. அதைத்தான் கச்சேரின்னு பெரியவா சொல்றா. ‘பாடினாதான் கச்சேரியா?’ன்னும் அதை நெனச்சுத்தான் கேட்டிருக்கா.”
பெரியவாள் பக்தரைப் பார்த்தார். “அவர் ஒரு பாதிக் கச்சேரிதான் சொன்னார். இன்னொரு பாதி சொல்லல்லை. அதுலே….அதுலே” என்று ஒரு குழந்தை அவமானத்தில் சொல்லுவது போலக் குரலை ஆக்கிக்கொண்டு, இழுத்து, இழுத்து, “என்னெ சொல்லப்படாத தினுஸில் சொல்லியிருக்கார்.” என்றார்.
குற்றச்சாட்டு என்று நடுங்குவதா, விளையாட்டு விநோதம் என்று வேடிக்கை பார்ப்பதா என்றே புரியாமல் நான் நின்று கொண்டிருக்க, அவர் மேலே சொல்லிக்கொண்டு போனார்.
“நான்….. சன்னாசி, சன்னாசி; கெழம் வேறே! என்னெ, பாட்டுக் கச்சேரி மட்டுமில்லே, டான்ஸ் கச்சேரியும் பண்றேன்னு எழுதியிருக்கார். அதுவும் என்ன டான்ஸ்? ரொம்பப் பேரோட ஜோடி சேர்ந்து ராஸ க்ரீடை ஆடறேன்—னு எழுதியிருக்கார்.”
அதி விநோத விளையாடலே என அகம் மகிழ்ந்தேன்.
பக்தர் சொன்னார், “எழுத்தாளரோல்லியோ ? அப்படி அழகாகக் கம்பேரிஸன் குடுத்திருக்காராக்கும் !”
“அப்ப நீயும் அவர் கக்ஷிதானாக்கும் ! நான் தனி ஆள், என்ன பண்றது ?” என்று அதோடு அவ்விஷயத்தை விட்ட பெரியவாள், “அது இருக்கட்டும். அவர் என் கச்சரியைச் சொல்றார். நான் அவர் கச்சேரியைப் பத்தின்னா முக்யமா சொல்லிண்டிருந்தது ? அதைப் பத்தி அவர் ஒண்ணும் சொல்லலியே ! கேளு !” என்றார்.
எனக்கு ஒரே எம்பராஸ்மென்ட்.
நல்லவேளை ! நான் பட்ட அவஸ்தையை ஓரிரு நிமிஷம் கவனித்த பக்தரே பெரியவாளிடம், “எனக்கே புரிஞ்சுடுத்து. அவர் ஆர்டிகிள் எழுதியிருக்கிறதையேதான் ‘கச்சேரி பண்ணியிருக்கார்’ னு பெரியவா சொல்லியிருக்கா. பாடினாதான்னு இல்லே, எழுதினாலும் கச்சேரி மாதிரி சந்தோஷப்படுத்த முடியும்னு சொல்லியிருக்கா. ‘பெரியவா பண்ற கச்சேரி பத்தி அவர் பண்ணியிருக்கிற கச்சேரி’ –ன்னு சொன்னதிலிருந்து அவரும் பல சமாசாரங்களைச் சேத்து நல்ல ஸங்கீதக் கச்சேரி மாதிரி எழுதியிருக்கார்னு தெரியறது” என்றார். தொடர்ந்து நான் எழுதிய பல, தாம் படித்திருப்பதாகக் கூறி சிலாகித்தும் சொன்னார்.
“பாக்கி இவர் எழுதி நீ படிச்சதெல்லாம் இருக்கட்டும். இதைப் படி.” என்று கூறிய பெரியவாள், எந்த விஷயமாயினும், அதில் அதிசயக் கவனம் செலுத்திக் காரியமும் ஆக்கும் தமக்கே உரிய ‘ஸின்ஸியரிடி’யுடன் அருகிலிருந்த பாரிஷதரிடம், ‘ஆஞ்சனேய ஸ்வாமிகள் கிட்ட அந்த ஸாவனீர் இருக்கு. வாங்கிண்டு வந்து இவருக்குக் குடு.” என்றார். (ஸ்ரீராம ஸமானரான பெரியவாளைப் பல்லாண்டு நீங்காமல் உடனிருந்து, நூலாராய்ச்சி முதலிய பணிகளில் பொறுப்புப் பெற்றவர் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள்).
பாரிஷதர் அவ்வறே சென்றார்.
பெரியவாள் பக்தரிடம் கூறினார், “நீ, ஊஹத்துல ‘நல்ல சங்கீதக் கச்சேரி’ன்னே ! எத்தனை நன்னா இருக்குன்னு படிச்சுப் பாரு.
“என்னை ரொம்ப ஸ்தோத்ரம் பண்ணியிருக்கார். அது இருக்கட்டும். ஒங்களுக்கெல்லாம் பக்தியினாலே என்னன்னமோ தோண்றது. ஸ்தோத்ரம் பண்றேள். அது ஒங்க ஸமாசாரம். அதுக்காக நான் ஆர்டிகிளைப் பாராட்டிச் சொல்லலை. ஆசார்யளைப் பத்தி முக்யமான பாயிண்ட் சரியா, நன்னா, brief – ஆ சொல்லி இருக்கார்னே மெச்சினது. வெறும் ஸ்தோத்ரமா இல்லாம, விஷயமா குடுத்திருக்கு. ஆசார்யாள் – னா நம்ம ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயத்துக்கு பிம்பம்தானே ? அந்த ஸாஸ்த்ரத்துலயே ஏன் இப்படி ஒரு பக்கம் அத்வைதம் ----இன்னொரு பக்கம் நூறாயிரம் பேதத்தோட கட்டுப்பாடு; ஒரு பக்கம் ஒரு கார்யமும் இல்லாம நிர்விகல்பம் --- இன்னொரு பக்கம் அதைச் சொல்ற ஆசார்யனுக்கே அநுஷ்டானம், பூஜைன்னு நூறு கார்யம் என்கிற மாதிரி சமாசாரங்கள் பளிச்சுனு தெளிவு பண்ணி எழுதியிருக்கு…”
சட்டென்று என்னிடம் பார்வை திருப்பிய பெரியவாள், “எனக்கு –ன்னு அபிப்ராயம் கெடயாது. ஆசார்யாள் சொல்றதையேதான் நான் ஃபாலோ பண்றேன் –னு சொல்லியிருக்கியே; அதே மாதிரி அந்த ஆசார்யாளுக்கும் ஸொந்த அபிப்ராயம் கெடயாது. சாஸ்த்ரத்திலே சொன்னதையேதான் அவர் முழுக்க முழுக்க அனுஸரிச்சுப் போனார் -- னு எழுதியிருக்கையோ ?´ என்றார்.
ஆசார்யளைக் குறித்த அந்த உண்மை எனக்கு நன்கு தெரிந்ததே எனினும், பிரஸ்தாவக் கட்டுரையில் அதை குறிப்பிட்டிருந்தேனா என்று நினைவில்லை.
அதைத் தெரிவித்துக் கொண்டேன். அதோடு அந்த பக்தருக்கும் தெரியட்டும் என்ற எண்ணத்தில் பெரியவாளிடம் சொன்னேன், “பெரியவா ஸ்லாகிச்சுச் சொல்ற விஷயமெல்லாம் பெரியவாலே சொல்லித்தான் நான் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சுண்டது. நான் கண்டு பிடிச்சுச் சொன்னதா அதுல ஒண்ணும் இல்லே. பெரியவா கொழந்தைக்குக் கூடப் புரியற மாதிரி சொல்றதை நான் கொழப்பி, சுழட்டி, வார்த்தை ஜாலக்கு பண்ணியிருக்கறதாத்தான் நான் நெஜமா ஃபீல் பண்றேன்” என்றேன்.
‘தெய்வத்தின் குரல்’ முதலிரு பாகங்களில் வைதீக மதம் குறித்த விஷயங்கள் படித்துள்ள வாசகர்கள் அடியேன் கட்டுரையைப் பார்த்தால் நான் சொன்னது நூறு விழுக்காடும் உண்மையே என ஒப்புக்கொள்வீர்கள். அதன் முதற்பாகம் வெளியாவதற்கு ஏழாண்டுகள் முற்பட்டு நடந்தது இந்நிகழ்ச்சி.
பெரியவாள் தம் பெரும் பெருமையைப் பாராது பிறரிடமுள்ள சின்னஞ்சிறிய சிறப்பையும் தம் உதாரப் பார்வையில் பெரிதாகப் பார்த்தவர். சொன்னார்.
“நான் சொன்னதாகவே இருக்கட்டும். ராமாயணம் வால்மீகி, கம்பர் சொன்னதுதான். ஆனால், 24000 ஸ்லோகம், 10,000 பாடல் –னு ரொம்பப்பெரிசா அவா பாடி வெச்சுட்டா. அதனால யாரோ கொஞ்சப் பேர்தான் படிச்சுப் பலன் அடையறா. அதையே, ‘ராம நாடகக் கீர்த்தனை’ன்னு கவிராயர் சுருக்கி, பாட்டாப் பாடற மாதிரி ----இப்பெல்லாம் டான்ஸும் ஆடறா; அதுக்கும் ஏர்வையா --- எழுதியிருக்கறபோது ரொம்பப் பேர் பாடி, ஆடி, கேட்டு, பார்த்து ஸந்தோஷத்துக்கு ஸந்தோஷமும் பட்டுண்டு, பலனுக்குப் பலனும் அடையறா. அந்த மாதிரி, நான் வளவளன்னு நெறய சொல்லியிருப்பேன்; அதைச் சுண்டக் காச்சற மாதிரி கண்டென்ஸ் பண்ணி குடுத்திருக்கே !
ஒன் கச்சேரி மொத்தத்துல எனக்கு ரொம்பப் புடிச்சுது. ஒண்ணு, ரெண்டு எடம் மட்டும் ‘சுள்’னு ஸங்கதி போட்டிருக்கே; ஒண்ணு, ரெண்டு எடத்துலே ஆலாபனை கொஞ்சம் அதியாகவே போயிருக்கு; ஒண்ணு. ரெண்டு எடத்துலே ஸ்வர ஸ்தானமே தப்பியும் போயிருக்கு ---- தாளம் தப்பியிருக்கும்னும் சொல்லலாமோ, என்னவோ ?”
இப்படிக் குறையும் கூறி என்னை நிறைவு செய்த ஸ்ரீசரணர் குறும்புக்குத் திரும்பினார் : “ஆனாலும் (ஸ்வரம், லயம் என்று குறிப்பிட்ட போதிலும்) ஒன்னைப் பாட்டுக் கச்சேரிக்காரனாவே நிறுத்திக்கறேம்பா ! நீ என்னெ ---சந்நாசியை --- தகாத சொன்னாப்பல, ப்ரம்மச்சாரி ஒன்னை நான் டான்ஸ் கச்சேரிக்குக் கொண்டு வரலை !”
என்ன பாக்யம் அவரிடம் பரிஹஸிப்புப் பெற ?
ஆஞ்சனேய ஸ்வாமிகளிடம் சென்ற பாரிஷதர் ஸூவனீரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்தார்.
ப்ரஸாதத் தட்டில் ப்ரஸாதத்துடனேயே வைத்து அதை பக்தரிடம் வழங்கினார் பகவான். “இதுவும் ப்ரஸாதம்தான்” என ப்ரஸன்னமாகக் கூறியவாறு !
இன்னும் வரும்………………..