Post by Sumi on Dec 23, 2014 17:35:41 GMT 5.5
Source: Dinamalar 16-Dec 2014
மார்கழி மாதத்தின் சிறப்புகள் பற்றி காஞ்சி மகாபெரியவர் சொல்வதைக் கேட்போமா!
மிருகசீரிடம் என்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதற்கு அடுத்த நட்சத்திரம் ஆருத்ரா எனப்படும் திருவாதிரை. "ஆருத்ரா' என்றால் "நனைந்து' என்று பொருள். மிருகசீரிஷத்திற்கும், திருவாதிரைக்கும் இடையில் பவுர்ணமி சந்திரன் இம்மாதத்தில் வருகிறார். ஆதலால் தான், இந்த மாதத்தை சமஸ்கிருதத்தில் "மார்க்கசீர்ஷம்' என்று அழைக்கிறார்கள். மார்க்கசீர்ஷி என்றும் சொல்வர்.
இம்மாதத்தில் திருவாதிரை அன்று பவுர்ணமி சந்திரன் சேரும் போது, பனியுடன் கூடிய மதியின் கிரணங்களால் பூமி குளிர்கிறது. இம்மாதத்தில் தான் மேகங்கள் கருவுறுகின்றன. கோடைகாலத்தில் காய்ந்த உலகம், மார்கழியில் தாபத்தை எல்லாம் போக்கிக் கொள்கிறது.
இந்த மாதத்தில் சிவபெருமான், அம்பாள், திருமால் என்ற மூன்று ஜோதிகளாய் பிரிந்த பரம்பொருளை வழிபட வேண்டும். அதிகாலையில் இவர்களுக்கு பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் மனசுத்தம் ஏற்படும்.
கேரளாவில், இளம்பெண்கள் தினமும் காலை 3 மணிக்குள் எழுந்து, கையில் குருத்துகளை ஏந்தி கூட்டம் கூட்டமாக குளிரில் நடுங்கியபடியே, ஆறு குளங்களை அடைந்து நீராடி, கண்ணனின் திருஅவதாரப் பாடல்களை உயர்ந்த குரலில் பாடுவார்கள்.
இந்த மாதத்திற்கு "ஆக்ரஹாயணீயம்' என்று நிகண்டு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.
அப்படி பார்த்தால், இதுவே வருடத்தின் முதல்மாதம் என்று ஆகிறது.
"ஹாயணீயம்' என்றால் "வருடம்'. அக்ரம் என்றால் என்றால் "முதல்' என்று பொருள். ஆங்கிலப் புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியும், இந்த மார்கழியிலேயே பிறக்கிறது.
தேவர்களுக்கு ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு. பகல்பொழுதின் முதல் மாதமே மார்கழி. அதுவே அவர்களுக்கு விடியற்காலை. தை மாதம் அவர்களுக்கு சூரிய உதயம். இதனால் தான் நம்முடைய மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும், தேவர்களுக்குரிய மார்கழி மாதமும் மிகுந்த சிறப்பு பெறுகிறது.
இதன் அடிப்படையிலேயே, ""மாஸானாம் மார்க சீர்ஷோஸ்மி' என்று பகவான் கண்ணனும் கீதையில் கூறுகிறான். அதாவது மாதங்களில் நான் மார்கழி என்றும், அதுவே சிறந்த மாதம் என்றும் பொருள்படுகிறது. இதனால் தான் தோழியருடன் ஆண்டாள் திருப்பாவை பாடி, இந்த மாதத்தில் நோன்பிருந்தாள். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இந்த மாதத்தில் பாடப்படுகிறது.
இந்த மாதத்தின் புனித நாட்கள் திருவாதிரையும், மகாவியதிபாதமும் ஆகும். இந்நாட்களில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனை நடக்கும். (இவ்வாண்டு மகாவியதிபாதம் மார்கழி 13ல் (டிசம்பர் 28) வருகிறது. அன்று தீர்த்தக்கரைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த அனுஷ்டானத்தால், நமது பித்ருக்களுக்கு (முன்னோர்) விசேஷ திருப்தி ஏற்படுகிறது. மேலும், அகம்பாவ தோஷம் அழிவதுடன், பேராசையால் ஏற்பட்ட தோஷமும் போய்விடுகிறது.