Post by anusham163 on Sept 8, 2014 23:10:33 GMT 5.5
ஞானாம்பிகை.
(தெய்வத்தின் குரல்—முதல் பகுதி (pp853).
இந்த உபநிஷத்தில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பாஷ்யத்தில் பஹுசோபமானா --- மிகவும் சோபை பொருந்தியவள் என்பதற்கு அர்த்தம் செய்கிறபோது, ‘சோபை உள்ளவற்றுக்கெல்லாம் மேலான உத்கிருஷ்டமான சோபை ஞானம்தான் ----வித்யைதான். அந்த வித்யா ரூபிணியே உமா. ஹைமவதியாகி ஹேம (பொன்) ஆபரணங்களை அணிந்தும், இந்த சோபையை வெளிப்படக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமே பரமேஸ்வரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்’ என்கிறார்.
அறிகிறவன், அறியப்படுகிற பொருள், அறிவு எல்லாமே தானாக ஆகிய ஏக வஸ்துவான பிரம்மத்தின் சக்தி அவள். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே’ என்று இந்த ஞான ஸ்வரூபத்தைத்தான் தாயுமான சுவாமிகள் சொல்லுகிறார்.
அடி முடி தெரியாத யக்ஷ வடிவம் என்று சொன்னவுடன், இந்தக் கதைக்கும் அருணாசலத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றும். இந்த உபநிஷத் கதை ஸ்ரீ காளஹஸ்தியுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நான் காளஹஸ்திக்குப் போயிருந்தபோது, கிரிப்பிரதக்ஷணம் செய்தேன். வழியில் ஒரு மலைமேல் ஏறி, அங்கு வனத்திலுள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்து கொண்டேன். அந்த லிங்கம் ‘ஸஹஸ்ர லிங்கம்’ ----அதாவது, லிங்காகாரமான ஒரே சிலைக்குள் சின்னச் சின்னதாக ஆயிரம் லிங்கங்கள் வடித்திருக்கும். அந்த சஹஸ்ர லிங்க ஆலயத்தில் ‘யக்ஷ லிங்கம்’ என்று ஒன்றைச் சொல்லுகிறார்கள். ‘இந்திர லிங்கம்’ என்று ஒன்றும் இருக்கிறது. காளஹஸ்திப் பெரிய கோவிலில் இருக்கிற அம்பாளின் பெயரோ ஞானாம்பிகை அல்லது ஞானப்ரஸூனாம்பிகை. ப்ரஸூனம் என்றால் பூ, ஞானப்ரஸூனாம்பிகையை ஞானப்பூங்கோதை என்பார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், கேன உபநிஷத்தில் சொல்லியிருக்கிற சம்பவம் -----யக்ஷம் தோன்றினதும், பிறகு அம்பாள் ஆவிர்பவித்து இந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததும் ----- இந்தக் காளஹஸ்தியில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அம்பாளை ஆராதிக்க நாமாகப் புது மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஸ்ரீகாளஹஸ்தியைப்போல் தேவர்களும் பெரிய ரிஷிகளும் மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மகா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும், அவளுடைய கடாக்ஷம் கிட்டிவிடும்.
புஷ்பமும் சுகந்தமும் போல், பாலும் சுவையும் போல், அக்னியும் பிரகாசமும் போல், அவள் பரமேஸ்வரனோடு பிரிக்க முடியாத ஞானசக்தி. இதே மாதிரி, ஸ்ரீமந் நாராயணனோடும் பிரிக்க முடியாமல் சகோதரி பாவத்தில் இருக்கிறாள். அவள் துர்க்கையாக வந்து அசுரர்களை வதைத்தபோது வைஷ்ணவியாக இருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ணஜயந்தியின் போதே யசோதையின் கர்ப்பத்திலிருந்து விஷ்ணுமாயையாக இந்த துர்க்கை அவதரித்தாள். துர்க்கையை சரத்கால நவராத்திரியில் பூஜிக்கிறோம். கெட்டதை வதைத்தவள் அவள். இந்த சம்ஹாரத்திற்குப் பின் நல்லதை வளர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க வேண்டும். ஞானோபதேசம் செய்ய அம்பாள் ஆவிர்ப்பதையே வஸந்த காலத்தில் ஒரு நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனுடன் துர்க்கை தோன்றின மாதிரி, ஸ்ரீ ராமநவமியின் போது ‘ஞானாம்பிகை’ தோன்றினாள். இந்த நவமி முடிய ஒன்பது நாட்கள் ‘வஸந்த நவராத்திரி’ எனப்படும். சண்டிகையாக உக்ர ரூபத்தில் எந்தப் பராசக்தியை சரத்கால நவராத்திரியில் பூஜித்தோமோ, அவளையே இப்போது ஸௌம்ய ரூபத்தில் ஞானாம்பாளாகப் பூஜிக்க வேண்டும். சண்டிகையாகிக் கெட்டதை சிக்ஷித்தவளே ஞானாம்பிகையாகி நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கிறாள்.
உமா என்பது பிரணவ ஸ்வரூபம் என்று முன்பே சொன்னேன். நாதமே அவளுக்கு சரீரம் மாதிரி. நம் சரீரம் எத்தனை அழகாக இருக்கிறது என்று நாம் அகம்பாவப் பட்டுக்கொண்டாலும், துளி மேலே கீறிவிட்டால் கூட உள்ளே பார்க்கச் சகிக்காமல் இருக்கிறது. எத்தனையோ கழிவடைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கிறோம். இதற்குள் எங்கே என்று சொல்லத் தெரியாமல் அறிவு என்கிற ஒரு மணி இருக்கிறது. அவளுடைய சரீரமோ நாத மயம், சப்த மயம், வாக்கு மயம் ---ஐம்பத்தோரு அக்ஷரங்களுமே அவளுக்கு சரீரமாக இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அறிவே வியாபித்திருக்கிறது. அந்த அறிவைத்தான் ஞானாம்பிகை என்பது.
மாறிக்கொண்டும் அழிந்து கொண்டும் இருப்பவைகளை சத்தியம் என்று நினைக்காமல், மாறாமல் சாசுவதமாக உள்ள ஒரே வஸ்துவை, அதற்கு வேறாக நான் என்று தனியாக ஒன்று இல்லை என்று அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவைத் தருகிற பராசக்தி ஞானாம்பிகையாகி திவ்விய மங்கள ஸ்வரூபிணீயாக விளங்குகிறாள். அவளை எந்நாளும் தியானம் செய்து அநுக்கிரஹம் பெறுவோம்.
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !
நிறைவுற்றது.