Post by uma2806 on Jul 23, 2014 16:40:31 GMT 5.5
அமுதமொழி
கிராமவாசிகள் தங்கள் கிராமங்களை விட்டு இப்பொழுது நகரங்களில் வந்து வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் சிலர் தங்கள் நிலத்தையும் வீட்டையும் விற்று அதனால் கிடைத்த பொருளைக் கவர்ண்மெண்டு கடன் பத்திரமாகவோ, பாங்கி ரசீதுகளாகவோ மாற்றி வைத்துக் கொண்டுள்ளார்கள்.
நகரங்களிலோ நமது தேவைக்கு அதிகமாக எல்லாவற்றையும் நம் மீது சுமத்திக் கொள்ளுகிறோம். தட்டு முட்டு சாமான்கள், சட்டை துணி, உடுப்புகள் – இவைகளை அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது. இவைகளைச் சேகரித்து வைக்க வசதியாக அதிக வாடகையுடன் இடம் வேண்டும். இவைகளையெல்லாம் செய்து கொண்டு, அடுத்த மாதம் சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்ற கவலை பெரும்பாலோர் மனசில் குடி கொண்டிருக்கிறது.
மனமகிழ்ச்சி
செல்வம் நிறைய சேகரித்து வைத்திருந்தும் அதில் கொஞ்சம் தருமத்திற்காக செலவு செய்ய மனமில்லாதவனுடைய செல்வமானது, அவனது பிற்கால சந்ததியர்களால் பலவாறு சிதற அடிக்கப்பட்டுவிடும். ஆனால் தரும சிந்தனை உள்ளவனது குடும்பமானது அப்போது மனமகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும்.
அத்வைதம்
அத்வைதம் என்றால் என்ன? அதனால் நமக்கென்ன உபயோகம்? அத்வைதம் என்பதற்கு இரண்டாவது இல்லை என்பது அர்த்தம். ஆயிரக்கணக்கான பொருள்கள் இருக்கையில் இரண்டாவது இல்லை என்று வைத்துக் கொண்டாலும் நமக்கென்ன பலன் என்று கேட்கலாம். நம்முடைய லட்சியம் கைகூடும்படி அத்வைதம் செய்யும். நாம் பல காரியங்களைச் செய்கிறோம். கஷ்டநிவர்த்திக்காகப் பாடுபடுகிறோம். இந்தக் கஷ்டங்களைப் போக்க, நாம் படும்பாட்டினால் நிவர்த்தி அடைந்ததுண்டா? பசி, தரித்திரம் முதலானவை இல்லாத ஊரில்லை. ஏன் துக்கப்படுகிறோம்? பசி, தாகம், வியாதி முதலியன உடம்புள்ள வரையில் உண்டு. உடம்பில்லாமல் செய்வதெப்படி? நாமாக மரணமடைந்தால் அந்த பாபமுள்படச் சேர்ந்து ஒரு உடம்பு வரும். உடம்பு எதனால் வந்தது? பாபம் செய்தோம் அல்லது புண்ணியம் செய்தோம். அதை அனுபவிக்க ஆத்மாவால் முடியாது. உடம்பை ஆத்மாவுக்குக் கொடுத்து அந்த உடம்பு தானென்று நினைத்துக் கொள்ளும்படி செய்து ஸ்வாமி தண்டிக்கிறார்….
நாம் எவ்வளவோ படிக்கின்றோம். கேட்டிருக்கிறோம். ஆயினும் மாயா கபட வஞ்சகங்களை விடவில்லை. ஏனெனில் சித்தத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளவில்லை. கர்மாக்கள் நம் மனதைப் பக்குவப்படுத்தும்.
வரும் பாவம்
பட்டுப்புடவை, பட்டு வேஷ்டிகளினால் பாவம் தான் வருகிறது. அகிம்சை, அகிம்சை என்று சொல்லிக்கொண்டு நாம் மாமிசமே சாப்பிடுவதில்லை. கொஞ்சம் யோசித்தால் நமக்கு இந்தப் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி இவற்றால் வரும் பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்கும் கூட வராது. ஒரு ஆடோ, இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால் இங்கே ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளுக்கு இம்ஸை ஏற்படுகிறது.
கோயிலுக்கு ஏன் போக வேண்டும்?
சூரியன் தான் பஞ்சை எரிக்கிறது. என்றாலும் சூரியனுக்கும், பஞ்சுக்கும் நடுவில் கண்ணாடிக் குண்டு (லென்ஸ்) இருக்கும்போது தான் பஞ்சு எரிகிறது. கோயிலுக்கு ஏன் போக வேண்டும்? பரமாத்மாதான் எங்கும் நிறைந்திருக்கிறாரே என்றால், பரமாத்மாவின் அனுக்ரஹம் ஜீவன்களுக்குக் கிடைக்கும்படி கோவில் ஸ்படிகத்தைப் போல் இருக்கிறது. லென்ஸைப் போல இருக்கிறது. எங்குமிருக்கும் பரமாத்மா அனுக்ரஹம் பண்ணுகிற சக்தி தேவாலயங்களில் நிறைய இருக்கிறது…..
ரிஷிகள் தாங்கள் செய்த தவங்களின் பலனை மக்களுக்குக் கொடுத்த இடங்களே கோயில்களும், தீர்த்தங்களும், தவம் செய்ய சக்தி இல்லாதவர்களும் பாவத்தை தொலைக்க வருபவர்களும் இக்கோயில்களுக்கு யாத்திரை செய்வதாலும் இத்தீர்த்தங்களில் முழுகுவதாலும் தாங்கள் புனிதமடைவதுடன் மிகவும் புண்யசாலிகளாகவும் ஆகின்றனர்.
பக்தி
பக்தி என்பது, ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன் என்று ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்வது போல் உள்ளது. ஆனால் அது வியாபாரம் ஆகிவிடும். அப்படி இல்லாது எப்போதும் ஈஸ்வரனிடம் போய்ச் சேருவது ஒன்றையே நினைத்துத் தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே அதற்குத்தான் பக்தி என்று பெயர்.
பாசம்
பாசம் என்பதுதான் அஞ்ஞானம். பாசத்தினால் கட்டப்பட்டிருக்கிற நாம் பசு. ஆண்டவன் பதி. பாசத்தை அறுப்பவன். அஞ்ஞானத்தை நிவர்த்தி செய்பவன் ஆண்டவன். அதனால்தான் அவனுக்குப் பசுபதி என்று நாமம் ஏற்பட்டது. பாசத்தினால் கட்டப்பட்டு இருக்கிறவரைக்கும் நமக்குப் பசு என்று பெயர். பாசத்தை அறுத்துவிட்டால் நாம் பதியோடு சேர்ந்துவிடுவோம்.
தேகம்
தேகம் ஒரு தேவாலயம். கோயிலில் மகாலிங்கம் இருப்பதுபோல் தேகத்தில் ஜீவன் இருக்கிறான்.
பரம்பொருள்
பரம்பொருள் எப்பொழுது இருந்து வருகிறதோ, அப்பொழுது முதல் உலகமும் இருந்து வருகிறது. ஆனால் பரம்பொருள் மாறாமல், அழியாமல் குறையாமல் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. இந்த உலகமோ, நாம் காணக்கூடிய வகையில் அழிந்துகொண்டும் மறுபடியும் உண்டாகியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.
மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்கிறோம். பாண்டம் பல காரியங்களுக்கு உபயோகப்பட்ட பிறகு உடைந்து மண்ணாகி விடுகிறது. மண்ணைத் தவிர குடம் வேறு இல்லை. குடம் உடைந்து மண்ணான பிறகு, வேறோறு உருவமாகவும் செய்யப்படுகிறது. அதுபோல உலகமும் மாறிக் கொண்டே வருகிறது.
அருள் பெற
பக்தியே இல்லாது வெறும் கர்மாக்களை மாத்திரம் செய்பவனிடமும், வேலை ஒன்றும் செய்யாது வெறுமனே பகவானை மாத்திரம் ஸ்தோத்திரம் செய்பவனிடமும் ஆண்டவன் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஸ்தோத்திரங்கள், பகவானின் மகிழ்ச்சிக்காக சொல்லப்படுவதில்லை. நாம் அவற்றைச் சொல்வதால் நம் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் அவனை நினைக்கிறோம். அவனது அருளையும் பெறுகிறோம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!!