Post by Sumi on Mar 28, 2014 15:18:49 GMT 5.5
Email message forwarded by our respected member Sri S Ramanathan
இது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிற கதை.
நம் சங்கர பகவத் பாதாள் இதற்கு பாஷ்யம் எழுதுகிறபோது, ''இங்கே தேவர் அஸுரர் என்று சொன்னதெல்லாமும், மநுஷ்யர்களுக்கு வேறல்லர். மனிதர்களிலேயே எல்லா நல்ல குணமும் இருந்தும் புலனடக்கம் இல்லாதவர்கள் தேவர்கள்; கொடுக்கிற ஸ்பாவமேயில்லாமல் லோப குணத்தோடு இருப்பவர்கள் அஸல் மநுஷ்யர்கள்;ஹிம்ஸை பண்ணிக்கொண்டு க்ரூரமாக இருக்கிற மனிதர்களே அஸுரர்கள். ஆனதால் மூன்று உபதேசங்ளும் நமக்கே ஏற்பட்டவை என்றுதான் நாம் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்''என்று சொல்லியிருக்கிறார்.
வாஸ்தவந்தான். ஆனாலும் இங்கே சொல்லியிருப்பதிலிருந்து மனிதவர்க்கத்துக்கு என்று ப்ரத்யேகமாக இருக்கிற பெரிய குறைபாடு லோபித்தனம்தான் என்று தெரிகிறது. இந்த்ரிய மனோ நிக்ரஹம் பண்ணினவர்களாகவும், க்ரூர ஸ்வபாவம் துளிக்கூட இல்லாமலும்கூட மனிதர்கள் தங்களை உயர்த்திக்கொண்டு விடலாம். ஆனால் இப்படிப்பட்டவர்கள்கூடப் பொருளை எடுத்துக் கொடுப்பது, தானம் செய்வது என்றால் கொஞ்சம் பின்னேதான் நிற்கிறார்கள். பொருளில் பற்றை விடுவது தான் மநுஷ்யனுக்கு மஹா கஷ்டமாக இருக்கிறது. இதனால்தான் மனிதனுக்கு முக்யமாக '' தத்த - தானம் பண்ணு '' என்று வேதத்தின் முடிவில் இருக்கப்பட்ட உபநிஷத்தே உபதேசம் பண்ணுகிறது.
நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் '' தத்த : - தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு''என்பதுதான். நம் இஷ்டம், இஷ்டமில்லை என்பதற்கெல்லாம் இடமில்லாமல், இது நமக்கு வேதம் போட்டிருக்கிற ஆஜ்ஞை!மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த ''தத்த''மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக் காட்ட வேண்டும்.
இந்த உபதேசம் வருகிற ப்ருஹதாரண்யக உபநிஷத் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. நாலு வேதங்களுக்குள் இன்று தேசம் முழுக்க ரொம்பவும் அநுஷ்டானத்திலிருப்பது யஜுர்வேதம்தான். அதில் சுக்லம், க்ருஷ்ணம் என்று இரண்டு பிரிவு உண்டு. வட இந்தியா முழுவதிலும் பெரும்பாலும் அநுஷ்டானத்தில் இருப்பது சுக்ல யஜுஸ்;தென்னிந்தியாவில் ரொம்பவும் அநுஸரிக்கப்படுவது க்ருஷ்ணயஜுஸ். சுக்ல யஜுஸைச் சேர்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து தானத்தைப் பற்றி சொன்னேன். இதேமாதிரி க்ருஷ்ண யஜுஸில் உள்ள தைத்திரீயோபநிஷத்திலும் (1.11.3) தானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.
அது என்ன சொல்கிறது? ''சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது''என்கிறது. ஸ்ரீயை (அதாவது செல்வத்தை)க் கொடுக்கும்போதே மனஸை ஸ்ரீயாக (லக்ஷ்மீகரமாக, மஙளமாக, ஸந்தோஷமாக) வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கிறது. முகத்தைச் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். ஸ்ரீயின் நிறைவுதான் 'ச்ரேயஸ்'என்பது. மனஸில் ஸ்ரீயுடன், மனமலர்ச்சியுடன், கொடுத்தால் இந்த தானத்தின் பலனாக 'ச்ரேயஸ்'கிடைக்கிறது. இன்னம் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும். ஹ்ரீயுடன் கொடு என்கிறது உபநிஷத். 'ஹ்ரீ'என்றால் வெட்கம், லஜ்ஜை என்று அர்த்தம். புருஷ ஸ¨க்தத்தில் பகவானுக்கு, ஸ்ரீ (லக்ஷ்மி) என்று இரண்டு பத்னிகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இங்கேயும் லக்ஷ்மியை, அதாவது பொருளைத் தரும்போது, ''ஸ்ரீயோடு கொடு'', ''ஹ்ரீயோடு கொடு''என்று சொல்லியிருக்கிறது. வெட்கம் இரண்டு காரணத்துக்காக. ஒன்று, இன்னும் ஜாஸ்தி தரமுடியவில்லையே என்று;இரண்டாவது, தானம் பண்ணுவது வெளியிலேயே தெரியக்கூடாது என்ற கெனரவமான கூச்சம். வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் 'தேஹி'என்று பிடுங்குவார்களோ என்பதால் அல்ல. இவன் தர்மிஷ்டன் என்று நாலு பேருக்குத் தெரிந்து நம்மை ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்தால் நமக்கு அஹம்பாவம் வந்துவிடும். அது தானத்தின் பலனையெல்லாம் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்.
தானம் பண்ணிவிட்டு நாம் நம் பெயரைப் பேப்பரில் போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், 'எப்படியாவது நாலு பேருக்கு நாம் தானம் பண்ணினதை நைஸாகத் தெரியப்படுத்த வேண்டும்'என்கிற எண்ணம் உள்ளூர இருந்தால் அதுவும் தோஷம்தான். அந்த நாலுபேர் நாம் தானம் பண்ணினதற்காக ஒரு பங்கு கொண்டாடினால், அதோடு, ''பண்ணின தானத்தை வெளியிலேயே தெரிவிக்காமல் எத்தனை உத்தமமான குணம்!'' என்று பத்து பங்கு ஸ்தோத்திரம் பண்ணுவார்கள். மனஸுக்குள் நாம் இந்த ஸ்தோத்திரத்துக்கு ஆசைப்பட்டுவிட்டால், பேப்பரில் போட்டுக் கொள்வதைவிட இதுவே பெரிய தோஷமாகிவிடும். ஆனாலும் இப்படியெல்லாம் ஆசை, கீசை தலைதூக்கிக்கொண்டுதானே இருக்கிறது? அது தலையைத் தூக்கவொட்டாமல் அழுத்தி வைக்க என்ன பண்ணலாம்?
ஒன்று பண்ணலாம் என்று தோன்றுகிறது. அதாவது, 'தானம் வாங்குகிறவன் நமக்கு அந்நியன் இல்லை; நம்மவனேதான்'என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக்கொண்டுவிட்டால் கொடுத்ததை வெளியில் சொல்லவே தோன்றாது. நம் குழந்தைக்கு அல்லது நெருங்கிய பந்துக்களுக்கு நாம் ஏதாவது செய்தால் அதை வெளியில் விளம்பரம் செய்து கொள்வோமா?அதே மாதிரிதான் எவரும் நமக்கு பந்துதான். ஸகல ஜந்துக்களும் ஒரே பார்வதி பரமேஸ்வராளின் குழந்தைகள்தான். அதனால் நாம் 'தானம் கொடுக்கிறோம்' என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். 'பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்'என்று அடங்கி, பவ்யமாகக் கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஓர் அஹங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும். '' பியா தேயம் '' என்கிறது உபநிஷதம். ''பியா''என்றால், 'பயந்துகொண்டு'என்று அர்த்தம். ஸாதாரணமாக, வாங்குகிறவன்தான் பயந்து கொண்டு நிற்பான்;கொடுக்கிறவன் அதட்டிக்கொண்டு கொடுப்பான். வாஸ்தவத்தில் கொடுக்கிறவன்தான் பயப்பட வேண்டும் என்கிறது உபநிஷத். கடைசியாக, 'ஞானத்தோடு'கொடுக்க வேண்டும் என்று முடிக்கிறது. 'ஸம்வித்துடன் என்று சொல்கிறது. 'ஸம்வித்'என்றால் 'நிறைந்த ஞானம்' கொடுக்கிறவன், வாங்கிக் கொள்கிறவன் இரண்டு பேர்வழிகளும் வாஸ்தவத்தில் ஒருவனேதான் என்ற அறிவுதான் அந்த 'ஸம்வித்'.
வேதத்தில் கொடையைப் பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிற மாதிரியே கீதையிலும் (அத்.17) பகவான் சொல்லியிருக்கிறார். அவர் தானத்தில் மூன்று தினுஸு சொல்லியிருக்கிறார். ஒன்று ஸாத்விகம் - உத்தமமானது;இரண்டாவது ராஜஸம் - மத்யமமானது;மூன்றாவது தாமஸம் - அதமமானது. துளிக்கூட ப்ரதி உபகாரத்தை எதிர்பார்க்காமல், தகுந்த பாத்திரத்துக்குத் தகுந்த இடத்தில், தகுந்த காலத்தில் தருவதுதான் 'ஸாத்விகம்'. தானம் செய்வதால் கிடைக்கிற புண்ய பலனையும், தானம் வாங்கினவன் செய்கிற ப்ரதி உபகாரத்தையும் நினைத்துக்கொண்டு, பொருளில் பற்றுப் போகாததால் உள்ளுக்குள் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொண்டே கொடுக்கிற தானம் 'ராஜஸம்'என்ற வகையைச் சேர்ந்தது. பாத்திரமில்லாதவர்களுக்குத் தகாத இடத்தில், தகாத காலத்தில், அவமானப் படுத்திக் கொடுப்பது 'தாமஸம்'இப்படி க்ருஷ்ண பரமாத்மா தானத்திலேயே distinguish (பாகுபாடு) பண்ணுகிறார்.
புராணங்களிலும் எங்கு பார்த்தாலும் தானத்தின் மஹிமை சொல்லியிருக்கிறது. இன்ன மாஸத்தில், இன்ன இடத்தில், இன்னாருக்கு இன்ன தானம் பண்ணினால் இன்ன பலன் என்று நிறையைச் சொல்லியிருக்கிறது - துலா மாஸத்தில் தானம் விசேஷம்; கங்காதீரத்தில் தானம் விசேஷம் என்கிறாற்போல தர்ம சாஸ்த்ரங்ளிலும், திருக்குறள், ஆத்திசூடி முதலான நூல்களிலும் அப்படியே ஈகையின் சிறப்பை விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது. ஈகை, தானம் என்பதெல்லாம் என்ன? பரோபகாரத்தின் ஒரு ரூபம் தானே?
ஆனபடியால், 'ஹிந்து மதத்தில் பரோபகாரத்தைப் பற்றி ஒன்றுமில்லை - ஆசாரம், அநுஷ்டானம், பூஜை, யோகம், ஆத்மவிசாரம் இதுகள்தான் உண்டு' என்று நினைப்பது கொஞ்சம்கூட ஸரியில்லை.