Post by kramans on Jan 17, 2012 9:23:02 GMT 5.5
நவீன விஞ்ஞான கருத்துக்கள் ஸ்ரீசங்கரரின் எல்லாமே இரு நிலையற்ற ஒன்றேதான் என்ற தத்துவத்திற்கு நெருங்கி வருகின்றன. இத்தகைய நவீன கருத்துக்கள் உலகில் சமாதானத்தைப் பற்றிய உணர்வு ஏற்பட வழிகோலும் உள்ளது ஒன்றுதான் என்ற தத்துவம் நன்றாக உணரப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஒரே ஆண்டவனின் ரூபங்கள் என்று அறிந்துவிட்டால் வித்தியாச மனப்பான்மை மறைந்துவிடும்.
ஒரு எதிரி நாடானாலும், அதிலுள்ள மக்களும் நாமும் ஒன்றே என்ற உணர்வு ஏற்படும். அவர்களுக்கு நேரும் துன்பம் தங்களுடையதே என்ற எண்ணம் எழுந்து உலக சமாதானத்தை நிலைநிறுத்த அஸ்திவாரம் போலாகும்.
சமீபகாலம் வரை, ஜடப்பொருள் வெவ்வேறு குணங்களுடைய மூலப்பொருள்களால் ஆனவை என்று கருத்தைக் கொண்டிருந்தனர். இப்போது, தனிப்பட்ட மூலப்பொருள்களுக்கிடையே வித்தியாசமில்லை
என்றும் எல்லாம் ஒரு சக்தியிலிருந்து உண்டானவை என்றும் சொல்கிறார்கள்.
ஆகவே, நவீன விஞ்ஞானிகள் வித்தியாசம் என்ற கருத்திலிருந்து எல்லாமே ஒன்று என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். குறிப்பாக, ஐன்ஸ்டீன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ், எடிங்டன் முதலானோர், ஸ்ரீ சங்கர பகவத்
பாதர்களின் அத்வைத சித்தாந்தத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள். நாம் காணும் பிரபஞ்சம் முழு உண்மையல்ல. ஒரு தோற்றமே என்று கூறி இரண்டாகவும் பலவாகவும் தோன்றும் வித்தியாசங்களை
மறுக்கிறார்கள்.
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளபோது காலத்திலோ, தூரத்திலோ நம்மிடமிருந்து பிரிந்திருப்பவர்களின் கவலைகள் நம்மை பாதிப்பதில்லை. நம்முடைய சென்ற கால துக்கங்களும் பின்நோக்கில் அவ்வளவு கடுமையாகத் தெரிவதில்லை. நம்முடைய விழிப்பு நிலையிலும், நம்முடைய கவலைகளும், துக்கங்களும் நம்மை பாதிக்காமலிருக்க பழகிக்கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ நம்மை பாதிக்காமல் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டுமென்பதே உபநிஷத்துகள் கற்பிக்கும் பாடமாகும். தவத்தின் மூலமே இத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வளவு விரிவான சடங்குகள் எதற்கு? மௌனப்பிரார்த்தனை போதாதா? என்ற கேள்வி எழலாம். சடங்குகளுடன் நிவேதனம் செய்வதின் உட்கருத்து என்னவென்றால் ஒரு பக்தன் எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் ஒன்றையும் தான் அனுபவித்து இன்பம் பெறும் பொருள்களின் உள் தத்துவத்தையும் உணர்ந்து நன்றி செலுத்தும் வகையாக தான் அனுபவிக்கும் பொருள்களை முதலில் அந்த மூலத்திற்கு நிவேதனம் செய்கிறான். மிகவும் உயர்ந்தவைகளையும், மிகவும் பரிசுத்தமானவைகளையும் மட்டும்
ஆண்டவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டுமென்பதால் [நிவேதனம் செய்யப்படாத எதையும் அனுபவிக்கக்கூடாது].
இப்பழக்கம் ஒவ்வொருவரும் நிவேதனத்துக்கு உரியவைகளையே பெற்று அதன் மூலம் மகிழ்ச்சியடைய உதவும். நம்முடைய வாழ்க்கை பூர்ணமாகவும், பரிசுத்தமாகவும் அமைய இது மிகவும் உதவும்.
நமக்கு விருப்பமான ஒன்றோ அல்லது ஒரு நபரோ நம்மை விட்டுப் பிரிய நேர்ந்தால் அல்லது நாம் அவர்களிடமிருந்து பிரிய நேர்ந்தாலோ நாம் துக்கப் படுகிறோம். ஆகவே ஒன்றின் மீது ஆசை வைத்த அதே நேரத்தில் துக்கத்திற்கு விதை அம்மதம் மங்க விதைக்கப்படுகிறதென்று தெரிகிறது.
நாம் பற்றுதல் கொண்ட பொருள்களிடமிருந்து மரணம் நம்மைக் கட்டாயமாகப் பிரித்து எல்லோருக்கும் துக்கத்தைத்தான் விளைவிக்கிறது.
பழுக்காத ஒரு மாங்காயைப் பறித்தால் அதிலிருந்தும், அதன் காம்பிலிருந்தும் [பிரிவால் கண்ணீர் விடுவதுபோல்] பால் சுரக்கிறது. அது பழுத்துவிட்டால் தானே காம்பிலிருந்து பிரிந்து விழுந்து விடுகிறது. [கண்ணீர் விடுவதில்லை]. அதுபோல் மரணம் நம்மை அழைக்கும்போது வருத்தமின்றி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர். ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர்.
நம்முடைய பாபங்களைக் கழித்துக்கொண்டு வாழ்க்கையின் குறிக்கோளை விமோசனம் பெற மதம் வழிமுறைகளைத் தருகிறது.
தருமம் நம்முடைய மதம் என்னும் மரத்தின் வேர்; பக்தியும் ஞானமும் அதன் மலர்கள், பழங்கள். அந்த வேர் காய்ந்து போகாமல் பாதுகாப்பது நம் கடமை. மிகப் பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில்
தருமத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஓரளவு தியாகம் தேவைப்படுகிறது.
அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரியை ஒரு வரி வசூல் செய்யும் அதிகாரியின் மூலம் செலுத்துவது போன்று ஈசுவரனுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் தனிப்பட்ட காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அந்தந்த தெய்வங்களின் மூலம் ஈசுவரனை அடைய வேண்டியிருக்கிறது. இந்த அம்சம் நம்முடைய மதத்தைப் பிற மதங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
ஒரு ஜாதி மற்றொரு ஜாதியை விட உயர்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த ரிஷிகள் பிராமணர்களுக்கு மூலமோ அந்த ரிஷிகளின் வாழ்க்கை முறைக்கு பிராமணர்கள் திரும்பினால் மட்டுமே இந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மை மறையும். அவ்வாறு செய்வதன் மூலம் நாம் பாபச் செயல்களிலிருந்து விலகி ஈசுவரனின் அருளுக்குப் பாத்திரமாகி உலக நன்மைக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய முடியும்.
தலையில் குடத்துடன் நடனம் ஆடுபவள், சங்கீதத்திற்கும் தன்னுடைய விதவிதமான அங்க அசைவுகளுக்குமிடையே தலையிலுள்ள குடத்தை ஒருகணம் கூட மறப்பதில்லை. அவ்வாறே
நம்முடைய தினசரி வாழ்க்கையின் செயல்களுக்கிடையே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளை
மறக்கக்கூடாது.
ஆண்மீக விஷயங்களில் உள்ள கட்டுப்பாடு இராணுவத்திலுள்ள கட்டுப்பாட்டைவிட கடுமையானது. வாழ்க்கையின் குறிக்கோளை நாம் அடையவேண்டும் என்றால் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். அவ்வாறிருந்தால் நாம் யாரிடமும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய வாழ்க்கைத் தூய்மை உலகோரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும்.
சமய நூல்களில் கூறப்பட்டவைகளை உங்கள் கருத்துக்கேற்ப திரிக்காதீர்கள். அவைகளை சரியாகப் புரிந்து கொண்டு, பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் அதன்படி நடக்கவேண்டும். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள். முடிந்தவரை அல்ல, முழுமையாக சாஸ்திரத்தில் நமக்கு இடப்பட்டவைகள் நம்முடைய சித்தத்தை சுத்தப்படுத்தி பாபங்களைப் போக்கும். அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட இருதயத்தில் கடவுள் தோன்றி உயர்ந்த ஆன்மீக அனுபவத்திற்கு வழி காட்டுவார். அந்த நிலையை அடைந்துவிட்டால் எந்த விதமான வித்தியாசங்களும் இல்லை.
----------------------------------------------------------------------------
கடவுள் பக்தி, உண்மை பேசுதல் பிறருக்கு உதவி செய்வது போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் மதங்களுக்கிடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அந்தந்த மதத்தலைவர்களின் அனுபவத்தில் பிறந்த சில கொள்கைகளிலும் ஆசாரங்களிலும் முக்கியமாக மதங்களுக்கிடையே வேறுபாடு உள்ளது.
நம்முடைய சந்தேகங்களுக்கு வேத சாஸ்திரங்களிலிருந்து விளக்கம் கிடைக்கவில்லை எனில், சாஸ்திரம் அறிந்து அதன்படி நடக்கும் பெரியோர்களின் வழியை நாமும் பின்பற்றவேண்டும். அத்தகைய வழிகாட்டுதல் கிடைக்காவிடில் ஆசையையும், அகங்காரத்தையும் வென்று தூய உள்ளம் கொண்ட நல்லவர்கள் வழியில் நாம் செல்ல வேண்டும். இதுவும் இல்லையெனில், நாம் நம்முடைய மனசாட்சியின்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கெட்ட எண்ணங்களாலும், தகாத ஆசைகளாலும் கோபம் போன்ற தீவிர உணர்ச்சிகளாலும் நாம் விழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நேரமும் நம் மனம் அசுத்தமடைகிறது. நம் மனதை தினமும் சுத்தப்படுத்த வேண்டியது நம் கடமை. இதனால் மன அழுக்குகள் மேன்மேலும் சேராமலிருக்கும். சித்த மலத்தைக் கழுவ வல்ல ஒரே நீர் தியானம்.
-------------------------------------------------------------------------------
சமநிலையில் உள்ளவர்களுக்கிடையே காணும் அன்புதான். நட்பு, கடவுளிடமும், மேல் மட்டத்தில் உள்ளவர்களிடமும் காட்டும் அன்பு. பக்தி நமக்குக் கீழ்ப்பட்டவரிடம் காட்டும் அன்பு க்ருபை எனப்படும். எல்லோரிடமும் அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மீது வாழ்க்கை என்னும் உயர்ந்த கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டும். தர்மமே நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம்முடைய மனநோய்களைத் தீர்ப்பதற்கு நமக்கு கடவுளின் அருள் வேண்டும். நம்முடைய மனதிலிருந்து கோபம், வெறுப்பு, பேராசை, காமவெறி இவைகளை விரட்ட வேண்டுமானால் மனதை அன்பால் நிரப்ப வேண்டும். ஒவ்வோருவர் உள்ளத்திலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார். நம்முடைய சுயநலத்தினாலும் மற்ற ஆசாபாசங்களாலும் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார். அன்பு வழியாக அவைகளை அகற்றி மனதை அன்பினால் நிரப்பினால் அது கடவுள் குடி கொள்வதற்குத் தகுதியாக தூய்மை பெறும்.
கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால், மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.
உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவதுபோல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்திபெற்று, நம்முன் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும் ஆசார அநுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும்.
-----------------------------------------------------------------------------
வரதக்ஷணை நிகழ்காலத்தில் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, எதிர்காலத்தில் நம்முடைய சமூகம் வீழ்ச்சியடைய வழிகோலுகிறது. நம்முடைய சமூகத்தின் மீதும், கலாசாரம், தர்மங்களின் மீதும் நல்லெண்ணம் கொண்டவர்கள் வரதக்ஷணை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நம்முடைய நாட்டின் சுதந்திரத்திற்காக எத்தனையோ தியாகங்கள் செய்து, கஷ்டங்களை அனுபவித்த நாம், நம்முடைய தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக வரதக்ஷணையை தியாகம் செய்ய முடியாதா?
இந்த வாழ்க்கையில் நலம் அடையக்கூடிய நிரந்தர செல்வம் பக்தி ஒன்றே. ஆகவே, பாகவதம், புராணம் போன்றவைகளைக் கேட்டு பக்தியை விருத்தி செய்துகொள்ளும் சந்தர்பங்களை நழுவ விடக்கூடாது.
--------------------------------------------------------------------------------
பொருளாதாரத்திற்கான நியதிகள் நாம் வாயால் பேசுவதற்குப் பொருந்தும். கட்டுப்பாடற்று பேசுவது மனஸ்தாபங்களுக்கும், தொல்லைகளுக்கும் வழி வகுக்கும். நமக்கு ஆன்மீக ரீதியில் நன்மை பயக்கக்கூடிய பேச்சாலோ அல்லது பிறர் மனம் நோகாவண்ணம் பேசும் பேச்சாகவோ இருந்தால் நமக்கு ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். இது நம்முடைய செய்கைகளுக்கும் பொருந்தும்.
நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால் ஒரு நதி சமுத்திரத்தை அண்டும்போது அதன் ஓசையும், வேகமும் அடக்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியைப் பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத்தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தைத் தேடி அந்த ஒன்றிடம் பக்தி செலுத்துகிறான். தன்னையே ஒருநாள் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும்.
கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக கொள்கைகளும் ஒழுங்கு முறைகளும், நன்னெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன. அவை அடிப்படை உண்மைகளை நம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று உலகும் நன்மை பெறச்செய்வோமாக.