|
Post by varagooran on Nov 18, 2019 18:23:04 GMT 5.5
"சாமி கொடுத்த பணம்!"-திருப்பித் தந்த ஏழைப் பெண்.
("திருப்பித் தரவேண்டாம். நீயே வச்சுக்கோ"-பெரியவா)
(அவள் சென்ற பின் பெரியவா, சிஷ்யர்களிடம் சொன்னார்;"பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் நானும்ஒரு வட்டிக்கடைக்காரன் ஆகியிருப்பேன்!")
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-7 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
கணவனை இழந்த ஒரு குடியானவப் பெண்மணி, பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள்.
"ரொம்பக் கஷ்டப்படறேன், சாமி. இரண்டு புள்ள குட்டிங்க இருக்கு. அவங்க போயி இரண்டு வருஷமாச்சு.ஆபீசிலேர்ந்து என்னவோ பணம் வரும்னு சொன்னாங்க. இன்னும் வரலை. பெரிய அதிகாரிங்ககிட்டேவெல்லாம் நேர்ல போய்ச் சொன்னேன். சாமிதான் வழி செய்யணும்" என்று வேண்டிக் கொண்டாள்.
பெரியவாள் அவளுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு போடச் சொன்னார்கள். அவள் விடை பெற்றுக் கொள்ள வந்தபோது பஸ் டிக்கெட்டுக்காக இருபத்தைந்து ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள்.
அவள் வீடு திரும்பியதும் ஒரு பதிவுத் தபால் காத்துக் கொண்டிருந்தது. அவள் புருஷன் வேலை பார்த்த கம்பெனியிலிருந்துதான். உள்ளே செக் ஒன்றரை லட்சத்துக்கு. பிராவிடென்ட் தொகை, கிராஜுவிட்டி எல்லாமாக.
மறுநாளே மறுபடியும் தரிசனத்துக்கு வந்தாள் அந்தப் பெண்மணி.மகிழ்ச்சியுடன் பணம் கிடைத்த விவரத்தைப் பெரியவாளிடம் தெரிவித்து விட்டு ரூபாய் இருபத்தைந்தை எதிரே வைத்தாள்.
"சாமி கொடுத்த பணம்!"
"திருப்பித் தரவேண்டாம். நீயே வச்சுக்கோ. இந்த இருவத்தஞ்சு ரூபா வந்தப்புறம்தானே லட்சம் வந்தது. இதுவும் உங்கிட்டயே இருக்கட்டும்..."
உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போனாள் அந்தப் பெண்மணி.அவள் சென்ற பின் பெரியவா, சிஷ்யர்களிடம் சொன்னார்;
"பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் நானும் ஒரு வட்டிக்கடைக்காரன் ஆகியிருப்பேன்!"
|
|
|
Post by padhu on Nov 18, 2019 19:25:56 GMT 5.5
MahaPeriyava darisanam kidaiththapin antha penukku udan dues Ellam vandu vittathu.
|
|